பிரதமர் நரேந்திர மோடி, ஐக்கிய அரபு அமீரகத்திற்கு நேற்று மேற்கொண்ட பயணத்தில், எல்பிஜி மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் விநியோகம் மற்றும் சேமிப்பு தொடர்பான முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது. வர்த்தகம், தொழில்நுட்பம், எரிசக்தி, பாதுகாப்பு, புத்தாக்கம் மற்றும் பசுமை வளர்ச்சி போன்ற துறைகளில் வளைகுடா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடனான உறவை வலுப்படுத்தும் நோக்கில், பிரதமர் மோடி 5 நாடுகளுக்கான பயணத்தை தொடங்கியுள்ளார். இந்த பயணத்தின் முதல் கட்டமாக அவர் ஐக்கிய அரபு அமீரகம் சென்றடைந்தார்.
அமீரக அதிபர் ஷேக் முகமது பின் ஜயீத் அல் நஹ்யன், பிரதமர் மோடியை அன்புடன் வரவேற்றார். ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதையும் அவருக்கு அளிக்கப்பட்டது. பின்னர், இரு தலைவர்களுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, ஈரான்-ஈராக் போர் காரணமாக ஏற்பட்டுள்ள பதற்றத்தைத் தணிப்பது குறித்து பிரதமர் மோடி வலியுறுத்தினார். அமீரகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்த பிரதமர், மேற்கு ஆசியாவில் அமைதி திரும்ப இந்தியா அனைத்து உதவிகளையும் செய்யும் என்று உறுதியளித்தார். மேலும், ஈரான் போர் சமயத்தில் இந்தியர்களுக்கு பாதுகாப்பு அளித்ததற்காக அதிபர் அல் நஹ்யனுக்கு பிரதமர் மோடி தனது நன்றியைத் தெரிவித்தார்.
உலகளாவிய எரிசக்தி மற்றும் வர்த்தக கப்பல் போக்குவரத்திற்கு ஹார்முஸ் ஜலசந்தி எந்தவித தடையும் இன்றி திறக்கப்பட வேண்டும் என்றும், அங்கு சர்வதேச சட்ட விதிகள் பின்பற்றப்பட வேண்டியதன் அவசியத்தையும் பிரதமர் மோடி எடுத்துரைத்தார். அதைத் தொடர்ந்து, எல்பிஜி காஸ், பெட்ரோலியப் பொருட்கள் விநியோகம் மற்றும் சேமிப்பு தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை மேலும் மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது உலகளவில் எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி மற்றும் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு போன்ற சூழலில், இந்த இருதரப்பு ஒப்பந்தம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மேலும், பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பு, கட்டமைப்பு திட்டங்களில் முதலீடு குறித்தும் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்திய கட்டமைப்பு மற்றும் ஆர்பிஎல் வங்கி, சம்மான் கேபிடல் போன்ற நிதி நிறுவனங்களில் ஐக்கிய அரபு அமீரகம் 5 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.48,000 கோடி) முதலீடு செய்ய உறுதியளித்துள்ளது. குஜராத் மாநிலத்தின் வாடினர் பகுதியில் கப்பல் பழுதுபார்க்கும் மையங்கள் அமைப்பதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தானது. இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவு மேலும் வலுப்பெறும். வர்த்தக உறவில் ஐக்கிய அரபு அமீரகம் இந்தியாவின் 3-வது பெரிய நாடாகவும், கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலான மொத்த முதலீட்டில் 7-வது பெரிய நாடாகவும் திகழ்கிறது.