தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக, சென்னை மற்றும் டெல்டா மாவட்டங்களில் காலை நேரங்களில் வெயிலும், மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழையும் பெய்யும் என வானிலை ஆய்வாளர் செல்வக்குமார் தெரிவித்துள்ளார்.
வங்கக்கடலில் உருவாகியுள்ள தீவிர தாழ்வுப்பகுதி, மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் நிலவும் காற்று சுழற்சியுடன் இணைந்து தமிழகத்தின் அருகே நீடித்து வருகிறது. இந்த இரண்டு வானிலை நிகழ்வுகளும் மேற்கு நோக்கி நகர்ந்து செயலிழக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, கடந்த இரண்டு நாட்களாக கடலோர மாவட்டங்களில் பெய்து வந்த மழை, தற்போது சென்னை உள்ளிட்ட வட கடலோரப் பகுதிகளையும் எட்டியுள்ளது. மேலும், குமரிக்கடல் காற்று சுழற்சியால் கோவை உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும் மழை தொடர்கிறது.
இன்று (மே 16) செயலிழந்த காற்று சுழற்சி மேற்கு நோக்கி நகரும்போது, தமிழகத்தின் உள்மாவட்டங்களிலும் ஆங்காங்கே மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடலோரப் பகுதிகளிலும் அவ்வப்போது மழை நீடிக்கும். நாளை (மே 17) முதல் கேரளா, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள், கன்னியாகுமரி முதல் நீலகிரி வரை மழை தீவிரமடையும். உள் மாவட்டங்கள் முதல் கடலோர மாவட்டங்கள் வரை மழை பரவலாக இருக்கும். குறிப்பாக மேற்கு மாவட்டங்களில் நல்ல மழையும், கடலோரப் பகுதிகளில் இரவு நேரங்களில் ஆங்காங்கே மழையும் எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை மற்றும் திருச்சி உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில், மே 17ஆம் தேதிக்குப் பிறகு, காலை நேரங்களில் வெயிலும், மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழையும் தொடரும். வெப்பச்சலனம் மற்றும் காற்று சுழற்சி இணைந்து மழை தருவதால், அக்னி நட்சத்திர காலத்திலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.