சென்னை: ஏழை, எளிய, நடுத்தர மக்கள் மற்றும் குறு, சிறு தொழில் நிறுவனங்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில், பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியதை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் விஜய் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தலா ரூ.3/- உயர்த்தியுள்ளது ஏற்கத்தக்கதல்ல' என்று குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறையும்போது, பெட்ரோல் நிறுவனங்கள் விலையைக் குறைப்பதில்லை. மாறாக, லாபத்தை மட்டும் எடுத்துக்கொள்கின்றன. குறிப்பாக, ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்த கையோடு இந்த விலை உயர்வு அறிவிக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. இது இருசக்கர வாகனங்கள், சிற்றுந்துகளைப் பயன்படுத்தும் சாதாரண மக்களின் மாத வருமானத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
மேலும், வங்கிக் கடனில் வாகனங்கள் வாங்கி வாடகைக்கு ஓட்டுபவர்கள் கூடுதல் நிதிச்சுமைக்கு ஆளாக நேரிடும். இந்தப் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வின் காரணமாக வாடகை வாகனங்களின் கட்டணமும் உயரக்கூடும். இது அத்தியாவசியப் பொருட்களின் விலையையும் அதிகரிக்கச் செய்து, சாமானிய மக்களின் வாங்கும் திறனை வெகுவாகப் பாதிக்கும்.
குறு, சிறு தொழில் நிறுவனங்களும் இந்தப் பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தால் பாதிக்கப்படும். உற்பத்திச் செலவுகள் அதிகரிப்பதால், சந்தையிலும் ஏற்றுமதியிலும் மந்தநிலை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் இந்த விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டுமென மத்திய அரசை முதல்வர் விஜய் கேட்டுக்கொண்டுள்ளார்.