மத்திய அரசின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் இன்று பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு தலா ₹3 உயர்த்தியுள்ளன. இதற்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த திடீர் விலை உயர்வு ஏழை, எளிய, நடுத்தர மக்களை கடுமையாக பாதிக்கும் என அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறையும்போது, பெட்ரோலிய நிறுவனங்கள் விலையை குறைப்பதில்லை. மாறாக, லாபத்தை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகின்றன. 5 மாநில தேர்தல் முடிந்த கையோடு இந்த விலை உயர்வு அறிவிக்கப்பட்டிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. இது சாதாரண மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என முதல்வர் வேதனை தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, இருசக்கர வாகனங்கள் மற்றும் சிற்றுந்துகளை நம்பி வாழும் மக்களின் மாத வருமானத்தில் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். வங்கிக் கடன் வாங்கி வாகனங்களை வாடகைக்கு ஓட்டுபவர்கள் கூடுதல் நிதிச்சுமையை எதிர்கொள்வார்கள். இதனால் வாடகை வாகனங்களின் கட்டணமும் உயரக்கூடும். இது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் விலையையும் உயர்த்தி, மக்களின் வாங்கும் திறனை குறைத்துவிடும்.
மேலும், குறு, சிறு தொழில் நிறுவனங்களின் உற்பத்திச் செலவும் அதிகரிக்கும். இதனால் சந்தையிலும், ஏற்றுமதியிலும் மந்தநிலை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, இந்த விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசை முதலமைச்சர் ஜோசப் விஜய் வலியுறுத்தியுள்ளார்.