காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் அருகே அமைந்துள்ள பழம்பெரும் வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், 7 நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு வைகாசி விசாக பிரம்மோற்சவம் கோலாகலமாக நடைபெற உள்ளது. வரும் 21-ந்தேதி அன்று காலை 4 மணிக்கு கொடியேற்றத்துடன் இந்த விழா தொடங்குகிறது.
சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததும், அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப்பெற்றதுமான இக்கோவில், திருமணப் பிரார்த்தனைகளுக்குப் பெயர் பெற்றது. இங்கு தொடர்ந்து 6 வாரங்கள் வந்து வேண்டிக்கொண்டால், திருமணம் விரைவில் நடைபெறும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும். பல அரசியல் மற்றும் திரையுலகப் பிரபலங்களும் இங்கு வந்து வேண்டிக்கொண்டு வாழ்வில் உயர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா பெருந்தொற்று மற்றும் கோவில் திருப்பணிகள் காரணமாக கடந்த 7 ஆண்டுகளாக பிரம்மோற்சவம் நடத்தப்படாமல் இருந்தது. தற்போது அனைத்து தடைகளும் நீங்கி, இந்த ஆண்டு வைகாசி விசாகப் பெருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
விழா நாளான 20-ந் தேதி கிராம தேவதை உற்சவம் மற்றும் விநாயகர் உற்சவத்துடன் தொடங்குகிறது. 21-ந்தேதி கொடியேற்றத்தைத் தொடர்ந்து சவுடால் உற்சவம், வெள்ளி மயில் வாகனம் என விழா களைகட்டும். தொடர்ந்து 30-ந்தேதி வரை பல்வேறு வாகன உற்சவங்கள், சிறப்பு அபிஷேகங்கள், கல்யாண உற்சவம், பெரிய மற்றும் சிறிய மயில் வாகன உற்சவங்கள், தீர்த்தவாரி, புஷ்ப பல்லக்கு என தினமும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும். 31-ந்தேதி சண்டிகேசர் வெள்ளி இடப வாகனம் மற்றும் விடையாற்றி உற்சவத்துடன் விழா நிறைவடையும். உற்சவ நாட்களில் நாள்தோறும் பரதநாட்டியம் மற்றும் சிறப்பு சொற்பொழிவுகளும் நடைபெற உள்ளன.