தமிழகத்தில் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம், கடந்த 2021 சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதியின்படி திமுக அரசால் தொடங்கப்பட்டது. ஆட்சிக்கு வந்த பிறகு, 2023 செப்டம்பர் 15 முதல் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதன் மூலம் 1 கோடியே 31 லட்சம் பெண்கள் பயனடைந்து வருகின்றனர். ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் ரூ.1,000 வரவு வைக்கப்படுகிறது.
தற்போது, விஜய் தலைமையிலான தவெக அரசு ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், வழக்கம்போல் மே மாதத்திற்கான மகளிர் உரிமைத்தொகை இன்று காலை பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 1 கோடியே 31 லட்சம் பெண் பயனாளர்களுக்கு ரூ.1,000 அவரவர் கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளது.
முதல்-அமைச்சர் விஜய் நேற்று அறிவித்தபடியே, மே மாதத்திற்கான மகளிர் உரிமைத்தொகை இன்று வந்து சேர்ந்துள்ளது. இந்த அறிவிப்பு பெண்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. அரசின் நலத்திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்ற நம்பிக்கையை இது மேலும் வலுப்படுத்துகிறது.
முன்னதாக, தவெக அரசால் மாணவர்களுக்கான 'தமிழ் புதல்வன்' திட்டம் மற்றும் அரசு பள்ளிகளில் பயின்று உயர்கல்வி தொடரும் மாணவிகளுக்கான 'புதுமைப் பெண்' திட்டத்தின் கீழ் தலா ரூ.1,000 உதவித்தொகை நேற்று மாணவ-மாணவியரின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.