ஈரான் உடனான போரின் உச்சக்கட்டத்தில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஐக்கிய அரபு அமீரகத்திற்கு ரகசிய பயணம் மேற்கொண்டதாக அவரது அலுவலகம் அறிவித்திருந்தது.
'சிங்கத்தின் கர்ஜனை' நடவடிக்கையின் போது, நெதன்யாகு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை சந்தித்ததாக தகவல்கள் வெளியாகின. இது இஸ்ரேலுக்கும் அமீரகத்திற்கும் இடையிலான உறவில் ஒரு வரலாற்று திருப்புமுனையாகக் கருதப்படுகிறது.
இந்த அறிவிப்பு, இஸ்ரேல் தனது 'அயர்ன் டோம்' பாதுகாப்பு அமைப்புகளையும், அவற்றை இயக்குபவர்களையும் அமீரகத்திற்கு அனுப்பியதாக இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதர் மைக் ஹக்பீ தெரிவித்த ஒரு நாள் கழித்து வந்துள்ளது. இந்த பயணம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், தற்போது ஐக்கிய அரபு அமீரகம் இந்த தகவலை திட்டவட்டமாக மறுத்துள்ளது. இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அமீரகத்திற்கு வரவில்லை என்றும், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் வெளிப்படையானவை என்றும், இரகசியமான அல்லது அதிகாரப்பூர்வமற்ற ஏற்பாடுகளின் அடிப்படையில் அல்ல என்றும் அந்நாட்டு செய்தி நிறுவனமான WAM வெளியிட்டுள்ள கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.