தமிழகத்தில் மாணவர்களிடையே போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், கல்லூரிகளை போதைப்பொருள் விற்பனை மையங்களாகவும், வகுப்பறைகளை மது அருந்தும் கூடங்களாகவும் மாற்றியிருக்கும் உங்களையும் உங்கள் கட்சியினரையும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என முன்னாள் சபாநாயகர் அப்பாவு கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:
கோவை தனியார் கல்லூரியில் மாணவர் அமுதன், போதைப்பொருள் பயன்பாடு குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுத்ததால், போதைப்பொருள் விற்பனை மற்றும் பயன்படுத்தும் 20 பேர் கொண்ட கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து, சென்னை திருவெற்றியூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவன் தினேஷ், போதைப்பொருள் பயன்படுத்தியதை காட்டிக் கொடுத்ததாக சக மாணவர்கள் 30 பேர் சேர்ந்து ஈவிரக்கமின்றி அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவங்களைப் பார்க்கும்போது, தமிழ்நாட்டு காவல்துறை பயனற்றதாக மாறிவிட்டதோ என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது.
மேலும், கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அரசு மேல்நிலைப் பள்ளியில் NEET பயிற்சிக்கு சென்ற மாணவிகள் வகுப்பறையிலேயே மது அருந்திய சம்பவம் உங்கள் கவனத்திற்கு வரவில்லையா? அல்லது காவல்துறையை உங்கள் நண்பர்களிடமே கொடுத்துவிட்டு தூங்கிக் கொண்டிருக்கிறீர்களா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் உங்கள் கட்சியினர்தான் காவல்துறை ஒத்துழைப்புடன் மாணவ, மாணவிகளிடம் தங்கு தடையின்றி போதைப்பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். இதைத் தடுக்க எந்த முயற்சியும் எடுக்காமல், உங்கள் கட்சியினர் மூலம் தமிழக மாணவர்களை சீரழிக்க துணிந்து விட்டீர்களா? என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் 'மக்களை தேடி மருத்துவம்' என்ற திட்டத்தை கொடுத்தார். ஆனால், நீங்கள் மாணவர்களைத் தேடி மதுவை கொடுக்கிறீர்கள். கல்லூரிகளை போதைப்பொருள் விற்பனை மையங்களாகவும், வகுப்பறைகளை மது அருந்தும் கூடங்களாகவும் மாற்றிய உங்களையும் உங்கள் கட்சியினரையும் மக்கள் மன்னிப்பார்களா? இதற்குப் பிறகும் வாயைத் திறக்காமல் கலக்கத்திலும் மயக்கத்திலும் கள்ள மௌனம் காக்கிறீர்களே என்றும் அவர் முதலமைச்சரை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார்.
