சென்னை: தமிழக முதல்வர் விஜய், தான் வெற்றி பெற்ற திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனையடுத்து, அந்தத் தொகுதி காலியானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், முதல்வர் விஜய் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி வாகை சூடினார். இருப்பினும், அவர் தனது திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை கடந்த மே 10-ம் தேதி ராஜினாமா செய்தார்.
முதல்வரின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட தேர்தல் ஆணையம், திருச்சி கிழக்கு தொகுதியை காலியானதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு தமிழக அரசின் அதிகாரப்பூர்வ அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது. பொதுவாக, ஒரு தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டால், அடுத்த ஆறு மாதங்களுக்குள் அங்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
இதன்படி, வரும் நவம்பர் மாதத்திற்குள் திருச்சி கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இடைத்தேர்தலில் தவெக மற்றும் திமுக ஆகிய கட்சிகள் தங்களது வேட்பாளர்களை யாரை நிறுத்தவுள்ளன என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.