தலைநகர் டெல்லியில், தனியார் சொகுசுப் பேருந்தில் பயணம் செய்த இளம்பெண் ஒருவர், ஓட்டுநர் மற்றும் நடத்துனரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 12-ஆம் தேதி இரவு, பேருந்தில் பயணம் செய்த பெண்ணை, ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து, குற்றம் சாட்டப்பட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துனரை கைது செய்துள்ளனர். மேலும், அந்தக் கொடூர சம்பவம் நடந்த சொகுசுப் பேருந்தையும் போலீசார் பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளது. நிர்பயா பாலியல் பலாத்கார சம்பவத்தின் வடுக்கள் மறைவதற்குள், மீண்டும் டெல்லியில் ஓடும் பேருந்தில் இது போன்ற கொடூரம் அரங்கேறியுள்ளது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம், பெண்கள் பாதுகாப்பற்ற பயண சூழலை மீண்டும் ஒருமுறை சுட்டிக்காட்டியுள்ளது. சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது. தொடர்ந்து இந்த விவகாரத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.