தூத்துக்குடி, தாளமுத்துநகர் அருகே மேட்டுப்பட்டி உமயம்மாள் கோவில் அருகே மது அருந்திக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட தகராறில் மீனவர் ஸ்னோவின் (26) கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். அவரது நண்பர் சூசை படுகாயமடைந்தார்.
நேற்று இரவு, ஸ்னோவின் மற்றும் அவரது நண்பர் சூசை ஆகியோர் கடலுக்கு சென்றுவிட்டு, மேட்டுப்பட்டி உமயம்மாள் கோவில் அருகே அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது, சந்தனராஜ் (எ) பாண்டி (20), முத்துக்குமார் (எ) கருப்பு (20) மற்றும் அவர்களுடன் மேலும் 2 பேர் என மொத்தம் 4 பேர் அங்கு வந்து அவர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். மதுபோதையில் ஏற்பட்ட வாய் தகராறு முற்றி, ஆத்திரமடைந்த சந்தனராஜ், முத்துக்குமார் மற்றும் அவர்களது கூட்டாளிகள் சேர்ந்து ஸ்னோவினை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளனர். இதைத் தடுக்க முயன்ற நண்பர் சூசைக்கும் தலையில் கத்திக்குத்து விழுந்தது.
தாக்குதல் நடத்திய 4 பேர் கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஸ்னோவின் மற்றும் சூசை ஆகியோரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஸ்னோவின் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த சூசைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான 4 பேரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.