விருதுநகர் மாவட்டம், சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவிலில் ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு, ஆகஸ்ட் 10 முதல் 13-ஆம் தேதி வரை பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்த நாட்களில் சுமார் 5 லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென மலைப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டது.
வத்திராயிருப்பு அருகேயுள்ள தாணிப்பாறை மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ, தற்போது மலையின் கீழ் பகுதியை நோக்கி வேகமாக பரவி வருகிறது. இந்த தீயை கட்டுப்படுத்தும் பணியில் வனத்துறையினர் மற்றும் களப்பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும், மலையில் காற்றின் வேகம் மற்றும் சூழலை கண்காணிக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
தற்போது நிலவும் தீ பரவும் சூழல், பக்தர்கள் மற்றும் பார்வையாளர்களின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளதால், நிலைமை சீரடையும் வரை சதுரகிரி மலைக்கோவிலுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை நேற்று (செவ்வாய்க்கிழமை) முதல் அமலுக்கு வந்துள்ளது.
பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்கும் நோக்கிலும், வனத்துறையினர் சதுரகிரிக்கு வருவதை தவிர்க்குமாறு பக்தர்களை கேட்டுக்கொண்டுள்ளனர். உயிர் மற்றும் பாதுகாப்புக்கு ஏற்படக்கூடிய அபாயங்களைத் தவிர்க்கும் வகையில், இயல்பு நிலை திரும்பும் வரை கோயிலுக்கு செல்ல அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
சதுரகிரி மலைப்பகுதியில் நிலவும் சூழ்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. நிலைமை சீரான பின்னர், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சதுரகிரி அருள்மிகு சுந்தரமகாலிங்கசுவாமி கோயிலுக்கு செல்வதற்கான அனுமதி குறித்து மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பில் தனியாக அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் இந்த அறிவிப்பை கவனத்தில் கொண்டு ஒத்துழைப்பு வழங்குமாறு வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
