நம் உடலுக்கு அத்தியாவசியமான இரும்புச்சத்து, இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு, இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவையும் உயர்த்துகிறது. மேலும், அனீமியா எனப்படும் இரத்த சோகை நோயைக் குணப்படுத்தவும் இது உதவுகிறது. பேரீட்சை மற்றும் கீரையைத் தவிர, இரும்புச்சத்து நிறைந்த பிற உணவுகள் பற்றியும் இங்கு காண்போம்.
பருப்பு மற்றும் பயிறு வகைகளில் புரதச்சத்து நிறைந்துள்ளதோடு, அதிகளவு இரும்புச்சத்தும் உள்ளது. புரதமும் இரும்புச்சத்தும் சேரும்போது, உடல் வலுப்பெற்று, இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறையாமல் ஆரோக்கியம் பேணப்படுகிறது.
ஆரோக்கியம் மிகுந்த சியா விதைகளில் நார்ச்சத்து அதிகமுள்ளது. கூடவே, இரும்புச்சத்தும் கணிசமாக இருக்கிறது. இந்த சியா விதைகளை உணவில் சேர்த்துக்கொள்வது, இரத்த சோகையைத் தடுப்பதோடு, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளையும் அண்டவிடாது.
முந்திரியில் ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்கள் இருப்பதோடு, இரும்புச்சத்தும் அதிகளவில் காணப்படுகிறது. இரத்த சோகை பிரச்சனை உள்ளவர்கள், தினமும் காலை வேளையில் 4 முந்திரிப் பருப்புகளைச் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
கொண்டைக்கடலையில் ஊட்டச்சத்துக்கள் மிகுந்துள்ளன. இதில் புரதம், வைட்டமின்கள் மற்றும் இரும்புச்சத்து ஆகியவை நிறைந்துள்ளன. குழந்தைகளுக்கு தினமும் ஒரு கைப்பிடி கொண்டைக்கடலையைச் சாப்பிடக் கொடுத்தால், இரத்த சோகை வராமல் தடுக்கலாம். மேலும், அவர்களின் தசை வளர்ச்சிக்கும் இது உறுதுணையாக இருக்கும்.
பூசணிக்காய் விதைகளில் புரதம், வைட்டமின்கள் மற்றும் அதிகளவு இரும்புச்சத்து உள்ளன. அதிக ஆரோக்கியத்தைப் பெற, பூசணிக்காய் விதைகளை வறுத்து ஸ்நாக்ஸ் போல உண்ணலாம். மேலும், விதைகளைப் பொடித்து சூப் செய்தும் அருந்தலாம். இது உடலுக்கு மிகுந்த ஆரோக்கியத்தைத் தரும்.
