கோவையில், திருமணமானதை மறைத்து 27 வயது இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கி, பின்னர் கருக்கலைப்பு செய்ய வைத்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. மேலும், இதுகுறித்து வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாகவும், தனிமையில் இருந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாகவும் மிரட்டிய போலீஸ்காரர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
பில்லூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த உதயகுமார் (30 வயது) என்பவர், பேரூர் அருகே வசிக்கும் 27 வயது பெண்ணை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி காதலித்து வந்துள்ளார். இருவரும் தனிமையில் சந்தித்து பழகிய நிலையில், அந்தப் பெண் கர்ப்பமடைந்தார். இது உதயகுமாருக்கு தெரியவந்ததும், அவரை வடவள்ளி மற்றும் அவினாசி அருகே உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று, கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்துள்ளார். இதற்கு அப்பெண் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
பின்னர், உதயகுமாருக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருப்பதை அறிந்த அப்பெண், தனது வாழ்க்கையை சீரழித்துவிட்டதாகக் கூறியுள்ளார். அதற்கு உதயகுமார், 'இதுபற்றி வெளியே சொன்னால், இருவரும் தனிமையில் இருந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன், உன்னையும் கொலை செய்து விடுவேன்' என்று கொடூரமாக மிரட்டியுள்ளார். இந்த கொடூர சம்பவத்தால் பாதிக்கப்பட்ட அப்பெண், பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில், போலீஸ்காரர் உதயகுமாரை அழைத்து விசாரணை நடத்திய போலீசார், அவர் பெண்ணை ஏமாற்றி கர்ப்பமாக்கியதுடன், கொலை மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து, பேரூர் மகளிர் போலீசார் உதயகுமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.