திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே நள்ளிரவில் நடந்த பயங்கர சாலை விபத்தில் காவலர் ஒருவர் உட்பட ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் குறித்து மேலும் விவரங்கள் தெரிவிக்கையில், கோவை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வெள்ளகோவில் உத்தாண்ட குமார வலசு பிரிவு அருகே காவல் சோதனைச்சாவடி அமைந்துள்ளது. அதிகாலை சுமார் 3 மணி அளவில், சாலைத் தடுப்பில் சவுக்கு மரங்களை ஏற்றி வந்த லாரி ஒன்று மோதியது. இதைத் தொடர்ந்து, லாரி ஓட்டுநர் மற்றும் பணியில் இருந்த காவலர் ரவிச்சந்திரன் (45) ஆகியோர் லாரியை ஓரமாக நிறுத்தி சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அதே திசையில் அதிவேகமாக வந்துகொண்டிருந்த கார் ஒன்று, முதலில் பணியில் இருந்த காவலர் ரவிச்சந்திரன் மற்றும் லாரி ஓட்டுநர் மீது மோதியது. பின்னர், காரின் கட்டுப்பாட்டை இழந்த ஓட்டுநர், நின்று கொண்டிருந்த லாரியின் மீதும் பலமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில், பணியில் இருந்த காவலர், லாரி ஓட்டுநர் மற்றும் காரில் பயணம் செய்த நான்கு பேர் என மொத்தம் ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விபத்து குறித்த தகவலறிந்ததும், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், உயிரிழந்த ஆறு பேரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த துயர சம்பவம் தொடர்பாக வெள்ளகோவில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த காவலர் ரவிச்சந்திரனின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ரூ.30 லட்சம் நிவாரண உதவி அறிவித்துள்ளார்.
