தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று, முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், மாநிலத்தில் உள்ள முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்து, வாழ்த்துக்களைப் பெற்று வருகிறார்.
நேற்று முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமான் ஆகியோரைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். இன்று, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோரைச் சந்தித்து நன்றி தெரிவித்ததுடன், வாழ்த்துக்களையும் பெற்றார்.
இந்த வரிசையில், அ.தி.மு.க.வின் ஒரு பிரிவைச் சேர்ந்த சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோரை அவர் சந்தித்துப் பேசினார்.
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.வில் இருந்து விலகி, சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி ஆகியோரின் தலைமையில் சுமார் 30 சட்டமன்ற உறுப்பினர்கள், விஜய்யின் தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ள நிலையில், இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
ஆனால், அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமியை அவர் இன்னும் சந்திக்கவில்லை. இதையடுத்து, அவர் தே.மு.தி.க. அலுவலகத்திற்குச் செல்லவுள்ளார்.
