திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரசண்ணகுமார் தலைமையில், ஏ.எஸ்.பி.க்கள், டி.எஸ்.பி.க்கள், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் ஆகியோருக்கான மாதாந்திர ஆய்வுக் கூட்டம் இன்று மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை நிலை, நிலுவையில் உள்ள வழக்குகள், கஞ்சா மற்றும் புகையிலை போன்ற போதைப்பொருட்களை கடத்துபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது எடுக்கப்பட வேண்டிய கடுமையான நடவடிக்கைகள், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் மற்றும் ரவுடிகள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள், நீதிமன்றப் பணிகள் மற்றும் பிற நிகழ்வுகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.
கூட்டத்திற்கு முன்னதாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல்துறையின் இருசக்கர, நான்கு சக்கர, கனரக வாகனங்கள் மற்றும் காவலர்கள் அவசர பணிக்குச் செல்லும் இருசக்கர வாகனங்கள், உயர் அதிகாரிகள் பயன்படுத்தும் வாகனங்கள் ஆகியவை முறையாகப் பராமரிக்கப்படுகின்றனவா என எஸ்.பி. ஆய்வு செய்தார். அப்போது, வாகன ஓட்டுநர்களுக்கு முக்கிய அறிவுரைகளை வழங்கியதுடன், வாகனங்களின் நிறைகுறைகளையும் கேட்டறிந்தார்.
இதனைத் தொடர்ந்து, கொலை, திருட்டு மற்றும் போக்சோ வழக்குகளில் சாட்சிகளை விரைந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தந்தவர்கள், நீதிமன்ற விசாரணைக்கு வராமல் தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியவர்கள், போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டவர்களைத் திறம்பட கைது செய்தவர்கள் என மாவட்டத்தில் சிறப்பாகப் பணியாற்றிய 62 காவல் அதிகாரிகள், காவலர்கள் மற்றும் அரசு வழக்கறிஞர்கள் ஆகியோரை மாவட்ட எஸ்.பி. பிரசண்ணகுமார் நேரில் அழைத்து நற்சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கிப் பாராட்டினார். இக்கூட்டத்தில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள், அரசு வழக்கறிஞர்கள், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
