கடந்த பிப்ரவரி மாதம் 28-ஆம் தேதி அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் தொடுத்தன. இதற்குப் பதிலடியாக ஈரான், அருகிலுள்ள வளைகுடா நாடுகள் மீது தாக்குதல் நடத்தியது. குறிப்பாக, ஐக்கிய அரபு அமீரகத்தின் விமான நிலையம், புர்ஜ் கலிஃபா மற்றும் ஹோட்டல்கள் உள்ளிட்ட இலக்குகளைத் தாக்கியது. எனினும், ஐக்கிய அரபு அமீரகத்தின் சிறந்த வான் பாதுகாப்பு அமைப்பு, ஈரானின் டிரோன்களையும் ஏவுகணைகளையும் இடைமறித்து அழித்தது.
ஐக்கிய அரபு அமீரகத்திற்கு தங்கள் வீரர்கள் உதவி செய்ததாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இஸ்ரேல் தனது அயர்ன் டோம் பாதுகாப்பு அமைப்புகளையும், அதை இயக்குவதற்கான வீரர்களையும் அனுப்பி உதவியதாக இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதர் மைக் ஹக்கபீ கூறியுள்ளார்.
'ஆபிரகாம் ஒப்பந்தத்தின் முதல் உறுப்பினராகிய ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எனது பாராட்டுகள். இதன்மூலம் கிடைக்கும் நன்மைகளை மட்டும் பாருங்கள்' என்று மைக் ஹக்கபீ மேலும் தெரிவித்தார். இஸ்ரேல் மற்றும் பல்வேறு நாடுகள் வெளியுறவு கொள்கை உறவுகளை ஏற்படுத்திக்கொள்ள அமெரிக்காவின் முன்னிலையில் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தமே ஆபிரகாம் ஒப்பந்தம் ஆகும்.
ஈரானுக்கு எதிரான மோதலின்போது ஐக்கிய அரபு அமீரகத்தைப் பாதுகாக்கும் நோக்கில், இஸ்ரேல் தனது அயர்ன் டோம் ஏவுகணைத் தடுப்பு அமைப்புகளையும், அவற்றை இயக்கும் வீரர்களையும் அனுப்பியிருந்தது.
இது தொடர்பாக ஐக்கிய அரபு அமீரகம் இதுவரை எந்தப் பதிலும் தெரிவிக்கவில்லை.
அரேபிய தீபகற்பத்தில் உள்ள ஏழு எமிரேட்டுகளின் கூட்டமைப்பான ஐக்கிய அரபு அமீரகம், 2020-ஆம் ஆண்டில் இஸ்ரேலை இராஜதந்திர ரீதியாக அங்கீகரித்தது. இதன் விளைவாக ஐக்கிய அரபு அமீரகத்தில் இஸ்ரேல் தூதரகம் திறக்கப்பட்டது.
ஈரான் மீது நீண்டகாலமாகவே ஐக்கிய அரபு அமீரகம் சந்தேகம் கொண்டுள்ள நிலையில், இஸ்ரேல்-ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான பாதுகாப்பு உறவுகள் வளர்ந்து வருவதை இந்த நிகழ்வு எடுத்துக்காட்டுகிறது.