சென்னை: தமிழக முதல்வர் விஜய், வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு 500 மீட்டர் சுற்றளவில் உள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் மூட உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பொதுமக்கள் நலன் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் தற்போது 4,765 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை நடத்தி வருகிறது. இவற்றில், வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு 500 மீட்டர் தொலைவுக்குள் அமைந்துள்ள கடைகளை ஆய்வு செய்ய முதல்வர் விஜய் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார். அந்த உத்தரவின்படி நடத்தப்பட்ட ஆய்வில், இத்தகைய மூன்று பிரிவுகளில் மொத்தம் 717 கடைகள் செயல்பட்டு வருவது கண்டறியப்பட்டது.
பொதுமக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, கண்டறியப்பட்ட 717 கடைகளில், வழிபாட்டுத் தலங்கள் அருகே உள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகே உள்ள 186 கடைகள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகே உள்ள 255 கடைகள் என அனைத்தும் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் மூடப்பட வேண்டும் என்று முதல்வர் விஜய் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக, 2023 ஆம் ஆண்டில், தமிழக அரசு வழிபாட்டுத் தலங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அருகே செயல்பட்டு வந்த 500 மதுக்கடைகளை மூடியது குறிப்பிடத்தக்கது.