தமிழ்நாட்டில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், புதிதாகத் தேர்தல் களத்தில் குதித்த தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்து, விஜய் முதல்-அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார்.
இந்தத் தேர்தலில் ஆட்சி பிடித்துவிடலாம் என்ற நம்பிக்கையுடன் களமிறங்கிய அ.தி.மு.க.வால் 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. மேலும், அக்கட்சி மூன்றாவது இடத்தைப் பிடித்ததால், சட்டசபையில் எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழந்தது.
இந்தத் தோல்விக்குப் பொறுப்பேற்று எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று அக்கட்சியினர் பலர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். அதுமட்டுமின்றி, சட்டசபைத் தலைவராக எஸ்.பி.வேலுமணியை நியமிக்க வேண்டும் என்று ஒரு பிரிவினர் வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக, இரு தரப்பினரும் அதிமுக சட்டமன்றத் தலைவராகத் தங்களை நியமிக்க வேண்டும் என்றும், தங்களுக்குத்தான் பெரும் ஆதரவு உண்டு என்றும் சபாநாயகரைச் சந்தித்து மனு அளித்தனர்.
இந்நிலையில், அ.தி.மு.க. இரண்டாகப் பிளவுபட்டுள்ள சூழலில், எஸ்.பி.வேலுமணி அணியினர் மெரினாவில் அமைந்துள்ள மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
சி.வி.சண்முகம் தலைமையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரைச் சந்தித்த பின்னர் இந்த மரியாதை செலுத்தப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.