ஹைதராபாத்தில், வேலைக்குச் சென்று கொண்டிருந்த விமானப் பணிப்பெண்ணை வாடகைக் கார் ஓட்டுநர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட 23 வயது ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட 37 வயது பெண், ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு பணிக்குச் சென்று கொண்டிருந்தபோது இந்த துயரம் நிகழ்ந்துள்ளது. ஜூலை 20ஆம் தேதி மதியம் சுமார் 2.40 மணியளவில், ஷம்ஷாபாத்திலிருந்து விமான நிலையத்திற்குச் செல்ல அந்தப் பெண் வாடகைக் காரில் ஏறியுள்ளார். ஆனால், ஓட்டுநர் திட்டமிட்ட பாதையில் செல்லாமல், விமான நிலையத்திற்கு அருகே ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு கட்டுமானப் பகுதிக்கு காரை ஓட்டிச் சென்றுள்ளார். இது குறித்து பெண் கேட்டபோது, இயற்கை உபாதை கழிக்க செல்வதாகக் கூறி காரை விட்டு இறங்கிய ஓட்டுநர், சில நிமிடங்களில் திரும்பி வந்து பின்பக்கக் கதவு வழியாக காருக்குள் நுழைந்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் தப்பிக்க முயன்று, காரிலிருந்து வெளியே ஓடி உதவி கேட்டு சத்தமிட்டுள்ளார். இதைக் கண்ட ஓட்டுநர், உடனடியாக காரை அங்கிருந்து வேகமாக ஓட்டிச் சென்று தப்பித்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. உடனடியாக, ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலைய காவல் நிலையத்தை அணுகிய பாதிக்கப்பட்ட பெண், தனது நிலையை விளக்கி புகார் அளித்தார். அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில், பாலியல் வன்கொடுமை மற்றும் தாக்குதல் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், குற்றவாளி தெலங்கானாவின் ரங்காரெட்டி மாவட்டத்தைச் சேர்ந்த எர்ரபோகு பிரசாந்த் குமார் என்பது கண்டறியப்பட்டது. அடுத்த நாளான ஜூலை 21 அன்று அவர் கைது செய்யப்பட்டார். காவல்துறையினரின் விசாரணையின்போது, அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். பின்னர், மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட அவர், உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்றம் அவரை சிறைக் காவலில் வைக்க உத்தரவிட்டது. இந்தச் சம்பவம் பெண்கள் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
வாடகை கார் ஓட்டுநர் பாலியல் வன்கொடுமை: விமானப் பணிப்பெண் புகார்

Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை