மதுரை செல்லூர் பகுதியில் கந்துவட்டி கொடுமையால் பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகளின் திருமண செலவுக்காக கடந்த 2021 ஆம் ஆண்டு கலையரசி என்பவரிடம் ரூ. 2 லட்சம் கடன் வாங்கியுள்ளார் பிரேமா. இந்த கடன் தொகைக்கு மாதந்தோறும் ரூ. 20,000 வட்டி கேட்டு கலையரசி நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும், பிரேமாவை தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரியவந்துள்ளது. கடந்த ஜூலை 13 ஆம் தேதி, கலையரசி பிரேமாவை அவதூறாக பேசியதால், மன உளைச்சலுக்கு ஆளான பிரேமா, இன்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். பிரேமாவின் மரணத்திற்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, அவரது உறவினர்கள் மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு வெளியே சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கந்துவட்டி கொடுமையால் பெண் தற்கொலை: உறவினர்கள் சாலை மறியல்
