சென்னை: 2026 ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் வலம் வரும் பஞ்சாப் கிங்ஸ் அணி வீரர்களுக்கு திடீர் செக் வைத்துள்ளது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம். குறிப்பாக சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமாக உள்ள நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கிற்கு இந்த புதிய உத்தரவால் மிகப்பெரிய சிக்கல் எழுந்துள்ளது. தங்களது சொந்த சமூக வலைதளப் பக்கங்களுக்காக தனிப்பட்ட வீடியோக்கள் மற்றும் ரீல்ஸ் எடுப்பது தொடர்பாக பல கடுமையான புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன.
ஐபிஎல் தொடரில் ஊழல் மற்றும் சூதாட்டங்களை தடுக்கும் வகையில் ஊழல் தடுப்புப் பிரிவு தொடர்ந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக சமீபத்தில் ஐபிஎல் அணிகளுக்கு மிக கடுமையான சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில், வீரர்கள் தங்கும் ஹோட்டல் அறைகளுக்குள் அனுமதியற்ற நபர்கள் நுழைவது குறித்தும், சமூக வலைதளங்களில் பிரபலமான நபர்களுடன் ஐபிஎல் வீரர்கள் அதிக நெருக்கம் காட்டுவது குறித்தும் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தடை செய்யப்பட்ட மற்றும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் வைத்து வீடியோக்கள் எடுப்பதற்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, வீரர்களின் அறைகளுக்குள் செல்ல விரும்பும் விருந்தினர்கள் இனி அணி மேலாளரிடம் கட்டாயம் எழுத்துப்பூர்வமாக முன் அனுமதி பெற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. வீரர்களின் நடமாட்டத்தை அணி நிர்வாகம் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய விதிகளை 48 மணி நேரத்திற்குள் அனைத்து வீரர்களுக்கும் விளக்கி, அவர்களிடம் ஒப்புதல் கையெழுத்து பெற வேண்டும் என அணிகளுக்கு கெடு விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தரம்சாலாவில் நடந்த பயிற்சிக்குப் பிறகு பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்வாகத்தின் தலைமை அதிகாரி தனது வீரர்களுடன் அவசர ஆலோசனை நடத்தி புதிய விதிமுறைகளை வாசித்துக் காட்டி விளக்கினார்.
இதில் பஞ்சாப் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கிற்கு மிகப்பெரிய சிக்கல் எழுந்துள்ளது. அவருக்கு இன்ஸ்டாகிராம் தளத்தில் 6 மில்லியனுக்கும் அதிகமான பாலோயர்ஸ் உள்ளனர். தொடர்ந்து பல வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வரும் அவருக்கு, இந்த புதிய விதிகள் மூலம் முட்டுக்கட்டை போடப்பட்டுள்ளது. இனிமேல் பஞ்சாப் அணி வீரர்களின் வீடியோக்கள் அனைத்தும் அந்த அணியின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்கள் மூலமாக மட்டுமே வெளியிடப்படும் என அணி நிர்வாகம் தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் அர்ஷ்தீப் சிங் ஐபிஎல் போட்டிகளுக்கு இடையே தனது காதலியுடன் ஹோட்டல் மற்றும் மைதானங்களுக்கு வெளியே சுற்றித் திரிவது பிசிசிஐ கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. எனவே, அர்ஷ்தீப் சிங் இனி கவனமாக இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.