2026 ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர் தோல்விகளை சந்தித்து வரும் நிலையில், தற்போது ஒரு புதிய சர்ச்சை வெடித்துள்ளது. அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கும் அணி நிர்வாகத்திற்கும் இடையே ஒருவித மறைமுக மோதல் நடப்பதாக ரசிகர்கள் சந்தேகிக்கத் தொடங்கியுள்ளனர். ஒருபுறம் ஹர்திக் பாண்டியாவுக்கு காயம் என தலைமைப் பயிற்சியாளர் மகிளா ஜெயவர்தனே கூற, மறுபுறம் ஹர்திக் பாண்டியா வலைப்பயிற்சியில் தீவிரமாக ஈடுபடும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இதனால் மும்பை அணியில் உண்மையில் என்ன நடக்கிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மகிளா ஜெயவர்தனே சமீபத்தில், ஹர்திக் பாண்டியாவுக்கு முதுகில் தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்து வருவதாகவும், இதனால் அவரால் பயிற்சியில் ஈடுபட முடியவில்லை என்றும் கூறியிருந்தார். ஆனால், இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே, ஹர்திக் பாண்டியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தீவிரமாக பேட்டிங் பயிற்சி செய்யும் வீடியோக்களை வெளியிட்டார். பயிற்சியாளரின் பேச்சிற்கும் ஹர்திக் பாண்டியாவின் செயலுக்கும் தொடர்பில்லாதது, மும்பை அணியின் உள்விவகாரங்களில் பெரும் குழப்பம் நிலவுவதை அப்பட்டமாக காட்டுகிறது.
இதுவரை 11 போட்டிகளில் விளையாடி 8 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் தவிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி, தரம்சாலாவில் நாளை பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக விளையாட உள்ளது. இந்த போட்டிக்காக மற்ற வீரர்கள் சென்ற நிலையில், ஹர்திக் பாண்டியா மட்டும் செல்லவில்லை. அவருக்கு காயம் காரணமாக பயணிக்க முடியவில்லையா அல்லது அணி நிர்வாகத்துடனான அதிருப்தியால் விலகி இருக்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அவரது இடத்தில் சூர்யகுமார் யாதவ் தற்காலிக கேப்டனாக செயல்படுகிறார்.
32 வயதான ஹர்திக் பாண்டியாவின் உடல்நிலையை மும்பையில் உள்ள மருத்துவக் குழுவினர் கண்காணித்து வருவதாகவும், போட்டிக்கு முன்பாக அவர் தரம்சாலா வர வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த 2026 ஐபிஎல் சீசன் ஹர்திக் பாண்டியாவிற்கு மிக மோசமானதாக அமைந்துள்ளது. 8 போட்டிகளில் விளையாடி 136.44 ஸ்ட்ரைக் ரேட்டில் 146 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். பந்துவீச்சில் 11.9 எக்கானமியில் 4 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளார். மோசமான ஃபார்ம், தொடர் தோல்விகள் என தவித்து வரும் ஹர்திக் பாண்டியா மீண்டும் அணிக்கு திரும்புவாரா, அவரது கேப்டன் பதவி நீடிக்குமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.