கோடை விடுமுறை, முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதுகுறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "சென்னை மற்றும் பிற முக்கிய நகரங்களிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை (வியாழக்கிழமை) முதல் வரும் 17-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை, முகூர்த்தம் மற்றும் வார விடுமுறை தினங்களை ஒட்டி, தமிழகம் முழுவதும் வழக்கத்தை விட அதிகமான பயணிகள் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், தினசரி சேவைகளுடன் கூடுதலாக சிறப்புப் பேருந்துகளையும் இயக்கத் திட்டமிட்டுள்ளன.
குறிப்பாக, சென்னையிலிருந்து திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய ஊர்களுக்கு நாளை 80 பேருந்துகளும், நாளை மறுநாள் 620 பேருந்துகளும், வருகிற 16-ஆம் தேதி (சனிக்கிழமை) 655 பேருந்துகளும் இயக்கப்படும். மேலும், சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 15 மற்றும் 16-ஆம் தேதிகளில் 120 பேருந்துகள் இயக்கப்படும். மாதாவரத்திலிருந்து 15 மற்றும் 16-ஆம் தேதிகளில் 25 பேருந்துகளும், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர் ஆகிய நகரங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.
இந்த வார இறுதியில் வியாழக்கிழமை அன்று 5,676 பயணிகளும், வெள்ளிக்கிழமை அன்று 10,853 பயணிகளும், சனிக்கிழமை அன்று 8,421 பயணிகளும், ஞாயிற்றுக்கிழமை அன்று 9,759 பயணிகளும் தங்கள் பயணங்களுக்கான முன்பதிவை மேற்கொண்டுள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், தொலைதூரப் பயணம் மேற்கொள்பவர்கள், கூட்ட நெரிசலைத் தவிர்க்க, www.tnstc.in இணையதளம் அல்லது மொபைல் செயலி மூலம் முன்கூட்டியே முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். சிறப்புப் பேருந்து இயக்கத்தை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதுமான அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.