“யாரிடமும் குதிரை பேரம் பேசவேண்டிய அவசியல் இல்லை” என்று விசில் பார்ட்டி விளக்கம் கொடுத்திருக்கும் நிலையில், விசில் பார்ட்டியை அதிகாரத்தில் அமர்த்த புதிதாய் புறப்பட்டு வந்திருக்கும் புரோக்கர்கள் பலர் பணத்தை மடியில் கட்டிவைத்துக் கொண்டு அலைகிறார்களாம்.
ஆட்சிக்கு ஆதரவுக் கரம் நீட்டிய கட்சி ஒன்றை ‘50 சி’ வரை பேரம் பேசித்தான் வழிக்குக் கொண்டு வந்தார்களாம். அதேபோல், ‘டுபாக்கூர்’ லெட்டர் கொடுத்ததாக பரபரப்பு கிளப்பிய எம்எல்ஏவுக்கு ‘30 சி’ வரைக்கும் கமுக்கமாக பேசி முடித்தார்களாம்.
இந்த விவகாரம் போலீஸ் விசாரணை வரை போயிருக்கும் நிலையில், ஆட்சி அமைக்கும் இந்த அரசியல் விளையாட்டு மைதானத்தில் அமலாக்கத் துறையை இறக்கிவிட்டு ஆட்டத்தை இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யமாக ஆடிப் பார்க்கலாமா என ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கிறதாம் டெல்லி.
பணப் புழக்கம் தொடர்பாக சூரியக் கட்சியின் ‘மாப்பிள்ளை சாருக்கு’ வேண்டப்பட்ட உளவாளிகளும் உன்னிப்பாக கவனித்து வருகிறார்களாம். இதனிடையே, ஆட்சி அமைக்கும் ஆட்டத்தில் இருந்து இலைக் கட்சி ஒதுங்கிவிட்டதால் அங்கே ஊசலாட்டத்தில் இருக்கும் எம்எல்ஏக்களை ‘இழுத்து வர’ முடியுமா என ‘குலுக்கல் மாப்பிள்ளையின்’ உறவுப் பெண்மணியிடம் உரிமையோடு நூல்விட்டுப் பார்த்தார்களாம். ஆனால், அதற்கு அவர் அசைந்து கொடுக்கவில்லையாம்.