மேற்குவங்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள ஒரு செய்தி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து மம்தா பானர்ஜியை நீக்குவதாக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் குழு அறிவித்துள்ளது. கட்சியின் புதிய தலைவராக அருப் ராய் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், ரித்தபிரதா பானர்ஜி தலைமையிலான அணியினர் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.
மேற்குவங்கத்தில் தொடர்ந்து மூன்று முறை ஆட்சியை பிடித்து, முதலமைச்சராக இருந்த மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ், 2026 சட்டமன்றத் தேர்தலில் 80 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று தோல்வியைச் சந்தித்தது. பாஜக 207 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்து, சுவேந்து அதிகாரி முதலமைச்சரானார். இந்த தேர்தல் முடிவுக்குப் பிறகு, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பெரும் சரிவை சந்தித்து வருவதாகவே நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன.
சட்டமன்றத்தில் 80 உறுப்பினர்களைக் கொண்ட திரிணாமுல் காங்கிரசில் இருந்து 60 எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தி அணியாக உருவாகி, தாங்கள் ஏற்றுக்கொண்ட தலைமையான ரிதப்ரதா பானர்ஜியை எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுத்தனர். இதனை ஏற்றுக்கொண்ட சபாநாயகர், ரிதப்ரதா பானர்ஜியை எதிர்க்கட்சித் தலைவராக அறிவித்தார். தேர்தலில் தோல்வி அடைந்து சட்டமன்றத்திற்குள் நுழைய முடியாத மம்தா பானர்ஜிக்கு இது பெரும் சரிவாக அமைந்தது.
இந்த அதிர்ச்சியில் இருந்து மம்தா மீள்வதற்குள், தனது கட்சியைச் சேர்ந்த 28 எம்.பி.க்களில் 20 எம்.பி.க்கள் அவருக்கு எதிராக திரும்பி, 60 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தனர். இந்நிலையில், கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து முன்னாள் முதல்-மந்திரி மம்தா பானர்ஜியை நீக்குவதாகவும், அவருக்கு பதிலாக அரூப் ராயை திரிணாமுல் காங்கிரஸ் தலைவராக நியமித்திருப்பதாகவும் அதிருப்தி எம்.எல்.ஏ. குழு அறிவித்துள்ளது. புதிய தலைவர் நியமனம் குறித்தான கடிதத்தை விரைவில் தேர்தல் ஆணையத்திடம் அதிருப்தி குழு வழங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.