புதுடெல்லி: வவ்வால்களிடம் புதிய வகை கரோனா வைரஸை தாய்லாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து, ‘செல்’ என்ற மருத்துவ இதழில் வெளியான கட்டுரையில் கூறியிருப்பதாவது:
தாய்லாந்தில் உள்ள வவ்வால்களிடம் கண்டறியப்பட்டுள்ள புதிய வைரஸ், மனிதர்களைத் தொற்றும் ஆற்றலைக் கொண்டிருக்கலாம். இந்த வைரஸ் மக்களிடையே பரவி வருவதற்கான ஆதாரம் இல்லை. ஆனாலும், விலங்குகளிடம் பரவும் வைரஸ்களை கண்காணிப்பது முக்கியம்.
இந்த ஆய்வில், வைரஸ் ஏசிஇ2 என்ற மனித உயிரணு புரதங்களுடன் இணையக் கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கவனித்துள்ளனர். இதன் பொருள் ஒரு பெருந்தொற்று உடனடியாக ஏற்படும் என்பதல்ல, மாறாக இது விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவக்கூடிய வாய்ப்பு இருப்பதைக் காட்டுகிறது. இவ்வாறு கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.