தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஒரு சம்பவம், தவெக ஆட்சியை கவிழ்க்கும் நோக்கில் ரூ.180 கோடி வரை பேரம் பேசப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல்கள்.
இது தொடர்பாக, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதியின் தவெக எம்எல்ஏ டாக்டர் இளையராஜா, தன்னை அரசுக்கு எதிராக வாக்களிக்க ரூ.35 கோடி பேரம் பேசியதாக சென்னை காவல் ஆணையர் அமல்ராஜிடம் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில், தேர்தல் கருத்துக்கணிப்பு நிறுவனம் நடத்தி வரும் திருநாவுக்கரசு, தியாகராஜன், நரேஷ், ரமேஷ், கார்த்தி உள்ளிட்ட 8 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் நடத்திய விசாரணையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரிலேயே இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக காவல்துறை தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. இதைத் தொடர்ந்து, இருவரிடமும் விசாரணை நடத்தவும், தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தனிப்படை போலீசார் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
கைது செய்யப்பட்டவர்கள் அளித்ததாக கூறப்படும் வாக்குமூலத்தின்படி, தவெக ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக முதலில் சட்டப்பேரவையில் அவைத்தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர திட்டமிடப்பட்டதாக தெரிய வந்துள்ளது. இதற்கு 10-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்பட்டதால், அவர்களை பணம் கொடுத்து தங்கள் பக்கம் இழுக்க முயற்சி செய்துள்ளனர்.
இதற்காக, ஒரு தனியார் நிறுவனம் மூலம் சுமார் ரூ.180 கோடி வரை நிதி ஒதுக்கப்பட்டதாகவும், இந்த திட்டம் வெற்றி பெற்றால் தங்களுக்கும் பெரும் தொகை வழங்கப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டதாக வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த ரகசிய நடவடிக்கைகளை மேற்கொள்ள கிண்டியில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் அவர்கள் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எந்தெந்த எம்எல்ஏக்களை அணுக வேண்டும் என்ற பட்டியல் வழங்கப்பட்டதாகவும், அதன்படி பலரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், எந்த எம்எல்ஏவும் பணத்திற்கு இணங்கவில்லை என்று வாக்குமூலத்தில் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையில் மேலும் பல முக்கிய அரசியல் பிரமுகர்களின் பெயர்கள் வெளிவரும் வாய்ப்புகள் இருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக, தமிழக அரசியலில் மேலும் பல பரபரப்பான திருப்பங்கள் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.