தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளில், அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்த முறைகேடுகளை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது. புதிய டாஸ்மாக் இயக்குனர் நந்த குமார் பொறுப்பேற்ற நிலையில், இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், மதுபானங்களை அதிக விலைக்கு விற்பனை செய்வது குறித்து தலைமை அலுவலகத்திற்கு புகார்கள் வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புகார்களின் அடிப்படையில், கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்யும் பணியாளர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த முறைகேடுகளை தடுக்க தவறினால், சம்பந்தப்பட்ட மாவட்ட மேலாளர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த சுற்றறிக்கையில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து முதுநிலை மண்டல மேலாளர்கள், மாவட்ட மேலாளர்கள் மற்றும் சிறப்பு பறக்கும் படை அலுவலர்கள் உரிய அறிவுரைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்வது தொடர்பாக அரசு மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்தன. புதிய அரசின் இந்த அதிரடி நடவடிக்கை, மதுபானம் வாங்கும் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதன் மூலம், நியாயமான விலையில் மதுபானங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.