தமிழகத்தில் இன்று காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக உள்ளதால், மக்கள் உஷாராக இருக்க வேண்டும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, சில மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தென்மண்டல வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் முனைவர் துரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, வடக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கதேசப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சியின் காரணமாக, இன்று (ஜூலை 3) வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும். இதன் தாக்கத்தால், தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும், ஜூலை 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜூலை 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழையும், மற்ற தமிழகப் பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று (ஜூலை 3) தென்மேற்கு மற்றும் மத்திய வங்கக்கடல், அந்தமான் கடல், ஆந்திர கடலோரப் பகுதிகள் போன்ற இடங்களில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் குறிப்பிட்ட கடலோரப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். கடந்த 24 மணி நேரத்தில், நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் அதிகபட்சமாக 31 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.