திமுக – அதிமுக கூட்டணி என்ற ஒரே பொய்யை திரும்பத் திரும்பச் சொல்லி, கழகத் தொண்டர்களின் நெஞ்சில் நஞ்சை விதைப்பதை ஏற்க முடியாது என அதிமுக சட்டமன்ற குழு கொறடா முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கடுமையாக சாடியுள்ளார். 'ஒரே பொய்யை திரும்பத் திரும்பச் சொன்னால் அது உண்மையாகிவிடும்' என்ற தத்துவத்தை கடைபிடித்தவன் கோயபல்ஸ் என்றும், தமிழக அரசியலில் பல கோயபல்ஸ்கள் வலம் வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தோற்றுவிக்கப்பட்ட பின்பு, புரட்சித் தலைவர் மற்றும் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் வழியில் பல சோதனைகளையும், பின்னடைவுகளையும் சந்தித்தபோதும், பலர் இயக்கத்தை விட்டு வெளியேறியுள்ளனர். ஆனால், இயக்கத்திற்கு சோதனை வரும்போதெல்லாம், 'இனிமேல் அஇஅதிமுகவிற்கு எதிர்காலமே இல்லை' என்று தாங்களாகவே முடிவெடுத்து, சிலர் ஆளுங்கட்சியில் அடைக்கலம் தேடி ஓடுவதாக அக்ரி கிருஷ்ணமூர்த்தி வேதனை தெரிவித்தார். இதுநாள்வரை இந்த இயக்கத்தால் அனுபவித்த தங்களுடைய சுகபோக வாழ்விற்கு பங்கம் வந்துவிடக்கூடாது என்பதற்காக, அவர்கள் யாரிடம் போய் கையேந்தி நின்றாலும், ஒன்றரை கோடி அஇஅதிமுக தொண்டர்களுக்கு எந்த கவலையும் இல்லை என்றும் அவர் கூறினார்.
தற்போதைய சூழலில், கழகப் பொதுச் செயலாளர் 'புரட்சித் தமிழர்' அண்ணன் எடப்பாடியார் அவர்களும், ஒன்றரை கோடித் தொண்டர்களும் நினைக்காத ஒன்றை, திமுக-வுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க முயன்றதாக சிலர் பிரச்சாரம் செய்வதாக அக்ரி கிருஷ்ணமூர்த்தி குற்றம் சாட்டினார். 'ஒரே பொய்யை திரும்பத் திரும்பச் சொன்னால் அது உண்மையாகிவிடும்' என்று செயல்பட்ட கோயபல்ஸ் என்றோ மறைந்துவிட்டான். ஆனால், அவனை நினைவுபடுத்துவதற்கென்றே பல கோயபல்ஸ்கள் இப்போது நம்மிடம் இருந்தே புறப்பட்டிருப்பது எண்ணிப் பார்க்க முடியாத ஒன்றாகும். தங்கள் சுயநலத்திற்காக இயக்கத்தைக் காட்டிக் கொடுப்பது மட்டுமல்லாமல், மனசாட்சிக்கு விரோதமாக அபாண்டமானதொரு குற்றச்சாட்டை எங்கள் கழகப் பொதுச் செயலாளர் மீது சுமத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில், 47 சட்டமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்பு, அனைவரும் ஒன்றுகூடி கழகப் பொதுச் செயலாளர் அவர்களை சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுத்து தீர்மானம் நிறைவேற்றி கையெழுத்திட்டோம். அன்றில் இருந்து, 25 பேர் ஒன்றுகூடி மைனாரிட்டி த.வெ.க. அரசுக்கு ஆதரவாக வாக்களித்த நாள்வரை, திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு நாம் ஆட்சி அமைக்க முயற்சிக்கலாம் என்று கழகப் பொதுச் செயலாளர் தெரிவித்தார் எனக் கூறமுடியுமா? கொறடா உத்தரவை மீறி வாக்களித்தவர்கள் திரும்ப வந்து வருத்தம் தெரிவித்தபோது, கழகப் பொதுச் செயலாளர் மீது சுமத்திய பழி தவறு என்று உணரவில்லையா? இப்போது, தங்களின் நல்வாழ்விற்காக சொன்ன ஒரே பொய்யையே திரும்பத் திரும்பச் சொல்லி கழகத் தொண்டர்களின் நெஞ்சில் நஞ்சை விதைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. வாழவைத்த இந்த இயக்கத்திற்கு விசுவாசமில்லாமல், தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் மாற்றுக் கட்சியை நோக்கி ஓடுபவர்களுக்கு தமிழக மக்களும், கழகத் தோழர்களும் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.