முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ், 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கே நேரடியாக சென்று பொது விநியோகத்திட்டப் பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த சேவையானது ஜூலை மாதம் 4 மற்றும் 6 ஆகிய தேதிகளில் சென்னையில் உள்ள 18 மண்டலங்களில் செயல்படுத்தப்பட உள்ளது.
குறிப்பாக, அண்ணாநகர், ஆலந்தூர், பெருங்குடி, சோழிங்கநல்லூர், தேனாம்பேட்டை, அடையாறு, திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர், கோடம்பாக்கம், வளசரவாக்கம், பல்லாவரம், குரோம்பேட்டை மற்றும் தாம்பரம் ஆகிய மண்டலங்களில் இந்த சிறப்பு விநியோகம் நடைபெறும். இந்த மண்டலங்களில் உள்ள கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் 990 நியாயவிலைக் கடைகளின் விற்பனையாளர்கள் அத்தியாவசியப் பொருட்களை வீடு தேடிச் சென்று விநியோகம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு விநியோகத்தின் மூலம், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் தங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை எளிதாகப் பெற முடியும். இது அவர்களின் சிரமங்களைக் குறைக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாகும். இந்த திட்டத்தின் மூலம் பயனடையும் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இத்திட்டத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம், அரசின் சிறப்பான சேவைகளில் ஒன்றாகும். இதன் மூலம், அரசின் சேவைகள் நேரடியாக மக்களைச் சென்றடைவதை உறுதி செய்யப்படுகிறது. இந்த அறிவிப்பு மாற்றுத்திறனாளிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.