புதிதாக பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசுக்கு நிம்மதி அளிக்கும் வகையில், உளவுத்துறையின் ஐ.ஜி.யாக அஸ்ரா கார்க் ஐ.பி.எஸ் நியமிக்கப்பட்டார். வடக்கு மண்டல ஐ.ஜியாக பணியாற்றி வந்த அவரை, உளவுத்துறையில் நியமித்தது த.வெ.க. அரசு. இந்த நியமனம், அறிந்த அதிகாரிகளுக்கு மகிழ்ச்சியை அளித்தது. எதிர்பார்த்தபடியே, மக்களுக்கும் காவல்துறைக்கும் இடையே இணக்கத்தை ஏற்படுத்தி, உளவுத்துறையில் பல சீர்திருத்தங்களையும் அஸ்ரா கார்க் கொண்டுவந்தார்.
மேலும், சில அதிகாரிகளின் பெயர்களை பரிந்துரைத்து, அவர்கள் குறிப்பிட்ட பணிகளுக்கு வந்தால் சிறப்பாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். அமைச்சர்களின் புரோட்டோகாலை மீறும் சில அதிகாரிகளால், பாதுகாப்பு அதிகாரிகள் குழப்பமடைந்து, பாதுகாப்பில் குளறுபடிகள் ஏற்படுவதாகவும், அசம்பாவிதங்கள் நிகழ வாய்ப்புள்ளதாகவும் அவர் எச்சரித்தும், அது கண்டுகொள்ளப்படவில்லை.
இந்த விஷயங்களை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்ல முயன்றபோது, அது நேரடியாக முதல்வரை சென்றடையவில்லை. அரசின் அத்தியாவசியமான ரகசியங்களைக்கூட முதல்வரிடம் நேரடியாக தெரிவிக்க முடியாத நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அரசுக்கு தொடர்பில்லாத குறிப்பிட்ட சிலரின் ஆதிக்கம் மட்டுமே அரசுக்குள் இருப்பதாக அவர் உணர்ந்தார். இந்த சூழலில் எப்படி பணி செய்வது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
உளவுத்துறைக்கும் முதல்வருக்கும் இடையேயான இந்த இடைவெளி அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. உளவுத்துறையின் குறிப்புகள் முதல்வருக்கு நேரடியாக செல்வதில்லை. அமைச்சர்கள் மற்றும் முதல்வரின் பெயரை பயன்படுத்தி செயல்படும் நபர்கள் பற்றியும் அறிக்கைகளில் எழுதப்பட்டிருந்தாலும், அவை அரசிற்கு தொடர்பில்லாத நபர்களால் பிரிக்கப்பட்டு, அதன் மூலம் நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிகிறது. இந்த நிலை நீடித்தால் தனக்கு கெட்ட பெயர் வந்துவிடும் என அஞ்சிய அஸ்ரா கார்க், மத்திய அரசு பணிக்கு திரும்ப விருப்பம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.