சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக மகளிரணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மகளிரணியின் செயல்பாடுகள் மற்றும் அதிமுகவின் வளர்ச்சிப் பணிகளில் பெண்களின் பங்களிப்பு குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. அதிமுகவில் உட்கட்சிப் பிரச்சனைகள் உச்சத்தில் இருக்கும் சூழலில், இந்த மகளிர் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
கூட்டத்தில், அதிமுகவுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், இரவு பகலாக தேர்தல் பணிகளில் ஈடுபட்ட கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றி மற்றும் பாராட்டு தெரிவிக்கும் தீர்மானமும் ஒருமனதாக ஏற்கப்பட்டது. பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க, தாமதப்படுத்தும் 'பொய்க்கால் குதிரை அரசு' உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
அரசு கல்லூரி உதவி பேராசிரியர் தேர்வு முடிவுகளில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகார்கள் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும், இளைஞர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் இந்த நியமனங்களில் தகுதியானவர்கள் மட்டுமே இடம்பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழகம் முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டால் மக்கள் அவதிப்படுவதாகவும், இப்பிரச்சினைக்கு போர்க்கால அடிப்படையில் தீர்வு காண வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
எதிர்வரும் சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் கண் துஞ்சாமல், கடமை உணர்வோடு பணியாற்றி கட்சிக்கு பெருமை சேர்க்க வேண்டும் என மகளிரணி நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் பேசிய அவர், 'துரோகிகள் அதிமுகவை விட்டு வெளியேறுவதால் தொண்டர்கள் மகிழ்ச்சியடைகின்றனர். அவர்களின் வெளியேற்றம் கட்சிக்கு இழப்பல்ல, மாறாக மேலும் வலுப்படுத்தும்' என்று குறிப்பிட்டார். மேலும், மக்கள் வாக்களித்து வெற்றி பெறச் செய்த சட்டமன்ற உறுப்பினர்கள், ராஜினாமா செய்துவிட்டு மாற்றுக் கட்சியில் இணைவது மக்களின் தீர்ப்புக்கு எதிரானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.