இந்திய அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் வாய்ப்பு மறுக்கப்பட்டது. அதற்கு பதிலாக, அவர் சக வீரர்களுக்கு தண்ணீர் எடுத்துச் சென்றது சில ரசிகர்களிடையே விமர்சனத்தை ஏற்படுத்தியது. ஐபிஎல் 2026 தொடரில் 700 ரன்களுக்கு மேல் குவித்த சூர்யவன்ஷிக்கு ஏன் வாய்ப்பு தரப்படவில்லை என்ற விவாதம் சூடுபிடித்தது. இந்த சூழலில், சூர்யவன்ஷி தண்ணீர் எடுத்துச் செல்வதில் எந்த தவறும் இல்லை என அஸ்வின் கூறியிருந்தார். ஆனால், அவரது கருத்தும் ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டது.
இந்நிலையில், தனது யூடியூப் பக்கத்தில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள அஸ்வின், 'சக வீரர்களுக்கு தண்ணீர் கொடுப்பது எப்போது கேவலமான செயலாக மாறியது?' என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், '1990 மற்றும் 2000-களில் நான் சென்னையில் ஒரு பால் பாயாக இருந்தபோது, வீரர்களுக்கு தண்ணீர் கொண்டு செல்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். இந்திய வீரர்களுக்கு ஓடிச் சென்று தண்ணீர் கொடுப்பது எப்படி குறைவான செயலாக மாறும்?' என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வைபவ் சூர்யவன்ஷி ஒரு மிகச்சிறந்த திறமைசாலி என்பதில் சந்தேகமில்லை என்றும், அவருக்கு நிச்சயம் ஒரு நாள் வாய்ப்பு கிடைக்கும் என்றும் அஸ்வின் கூறினார். ஆனால், மைதானத்திற்கு வெளியே அமர்ந்து ஆட்டத்தைக் கவனிப்பதிலும், அணி வீரர்களுக்கு உதவுவதிலும் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ளலாம் என்றும் அவர் நியாயப்படுத்தினார். சச்சின் டெண்டுல்கரைப் போல சூர்யவன்ஷிக்கு நீண்ட எதிர்காலம் உள்ளது என்றும், ஆரம்பத்திலேயே வெளியே அமர்ந்து விளையாட்டைக் கவனிப்பது, அவருக்கு அணியின் சூழலைப் புரிந்து கொள்ளவும், பக்குவத்தை வளர்த்துக் கொள்ளவும் உதவும் என்றும் அஸ்வின் தெரிவித்தார்.
இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று (ஜூலை 1) தொடங்கவுள்ள நிலையில், சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இருப்பினும், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோருக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்பதை மறைமுகமாக உணர்த்தியுள்ளார். இந்திய அணி அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் 0-2 என தோல்வியடைந்ததும் குறிப்பிடத்தக்கது.