சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் சிங் தனது அபாரமான பந்துவீச்சால் அனைவரையும் கவர்ந்தார். குறிப்பாக, அவர் விக்கெட்டை வீழ்த்திய பிறகு பாக்கெட்டில் இருந்து எடுத்த ரகசியக் குறிப்புடன் செய்த கொண்டாட்டம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தத் தன்னம்பிக்கையான செயல், லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
இந்த சீசனில் தனக்குக் கிடைத்த முதல் வாய்ப்பிலேயே, லக்னோவின் இடதுகை வேகப்பந்து வீச்சாளரான ஆகாஷ் சிங், சென்னை அணியின் வலுவான பேட்டிங் வரிசையை நிலைகுலையச் செய்தார். அதிரடியாக ஆடிய சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் நட்சத்திர வீரர் ரஹானே ஆகியோரை அடுத்தடுத்து பெவிலியன் அனுப்பினார். தனது நான்கு ஓவர் வீச்சில் வெறும் 26 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஒவ்வொரு விக்கெட்டுக்குப் பிறகும், தனது பாக்கெட்டில் இருந்து ஒரு காகிதத்தை எடுத்து ரசிகர்களிடம் காட்டினார்.
அந்தக் காகிதத்தில் '#Akki on fire – Akash knows how to take wickets in T20 game' (அக்கி ஃபார்மில் இருக்கிறார் – டி20 போட்டியில் எப்படி விக்கெட் எடுக்க வேண்டும் என்று ஆகாஷுக்குத் தெரியும்) என்று எழுதப்பட்டிருந்தது. ஒரு இளம் வீரரின் இந்த அசாதாரண தன்னம்பிக்கையும், அதிரடி கொண்டாட்டமும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, ஆகாஷ் சிங்கின் திறமையைப் பாராட்டி தனது எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) பக்கத்தில் பதிவிட்டார்.
அவர் பதிவிட்டதாவது: 'ஆகாஷ், இன்று இரவு 3 முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தினாய். மிகச்சிறப்பான ஆட்டம். அந்த காகிதக் குறிப்பே அனைத்தையும் சொல்லிவிட்டது. டி20 போட்டியில் விக்கெட்டுகளை எப்படி எடுக்க வேண்டும் என்பதை நீ நிரூபித்துக் காட்டிவிட்டாய். உன்னைக் குறித்துப் பெருமைப்படுகிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், ஆகாஷ் சிங் தனது ஆட்டம் குறித்துப் பேசுகையில், 'எனது மனநிலை எப்போதுமே பெரிய விக்கெட்டுகளை வீழ்த்துவதைப் பற்றியது தான். ஐபிஎல் போன்ற தொடர்களில் நீங்கள் விளையாட மட்டும் வரக்கூடாது, ஆதிக்கம் செலுத்த வர வேண்டும். பேட்டிங் வலிமை அதிகரித்து வரும் இந்தச் சூழலில், நாம் மனதளவிலும் திறமை ரீதியாகவும் ஒரு படி முன்னால் இருக்க வேண்டும். பேட்ஸ்மேன் யார் என்பது எனக்கு முக்கியமில்லை, எனது பந்துவீச்சைச் சரியாகச் செயல்படுத்துவதில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன். பெரிய வீரர்களின் விக்கெட்டை எடுக்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சியே தனி' எனத் தெரிவித்தார்.