இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன் மீண்டும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளார்.
கடந்த டி20 உலகக் கோப்பையில் சஞ்சு சாம்சன் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றியதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 97 ரன்கள், அரையிறுதியில் இங்கிலாந்துக்கு எதிராக 89 ரன்கள், இறுதிப் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக 89 ரன்கள் என அசத்தியுள்ளார். மேலும், ஒரே சீசனில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற பெருமையையும், தொடர் நாயகன் விருதையும் வென்றார். இருப்பினும், தற்போது 'சாம்சன் அடித்தால் சதம், இல்லையென்றால் 10 ரன்களுக்குள் ஆட்டமிழப்பு' என்ற நிலையிலேயே விளையாடி வருகிறார்.
தற்போது வைபவ் சூர்யவன்சி போன்ற இளம் வீரர்கள் வாய்ப்புக்காக காத்திருக்கும் நிலையில், சஞ்சு சாம்சன் மீது கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அயர்லாந்துக்கு எதிரான போட்டிகளில் வெறும் 5 ரன்கள் மற்றும் டக் அவுட் ஆனது அவரது அழுத்தத்தை மேலும் அதிகரித்துள்ளது. இந்த சூழலில், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அவர் சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வெறும் 7 பந்துகளை எதிர்கொண்டு 1 ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இது ரசிகர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. உலகக் கோப்பை வென்றதால் தொடர்ந்து வாய்ப்பு வழங்க முடியாது என்றும், கிடைக்கும் வாய்ப்புகளை வீணடிப்பதாகவும் ரசிகர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடியபோதும் இதே போன்ற ஆட்டத்தையே சாம்சன் வெளிப்படுத்தினார். 14 போட்டிகளில் 2 சதம், 1 அரை சதம் என 477 ரன்கள் குவித்தாலும், பல போட்டிகளில் அவர் தடுமாறினார். சதம் அடிக்கும் வீரராக இருந்தாலும், பெரும்பாலான போட்டிகளில் 10 ரன்களைக் கூட தாண்டாதது எப்படி நியாயம் என ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர். குறைந்தபட்சம் 20-30 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கத்தை கொடுப்பது அவரது பணி என்றும், டி20 உலகக் கோப்பையில் வென்ற கேப்டன் சூரியகுமார் நீக்கப்பட்ட சூழலில், சாம்சனின் இடமும் ஆபத்தில் இருப்பதை உணர்ந்து விளையாட வேண்டும் என்றும் ரசிகர்கள் வலியுறுத்துகின்றனர்.