வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையில் இன்று (ஜூலை 1) ரூ.172.50 குறைக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர் ரூ.3,106க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வீடுகளுக்கு 14.20 கிலோ மற்றும் வணிக பயன்பாட்டிற்கு 19 கிலோ எடையில் சமையல் காஸ் சிலிண்டர்களை விநியோகம் செய்கின்றன.
கடந்த மார்ச் மாதம், மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்ட போர் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிக்கப்பட்டது. இதனால், வீடுகளுக்கு தடையின்றி சமையல் காஸ் சிலிண்டர்கள் கிடைப்பதை உறுதிசெய்ய, ஹோட்டல்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படும் வணிக சிலிண்டர் விநியோகத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தற்போது அமெரிக்கா- ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டு, மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் தணிந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, சமீபத்தில் பெட்ரோலிய அமைச்சகம் வணிக சமையல் காஸ் சிலிண்டர் வினியோகம் மீதான கட்டுப்பாடுகளை நீக்கியது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, இன்று வணிக சிலிண்டர்களின் விலை கணிசமாகக் குறைந்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் காரணமாக சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், தற்போது விலை குறைந்துள்ளது பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும், 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சமையல் காஸ் சிலிண்டர்களின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அவை தொடர்ந்து ரூ.928.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.