திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்குள் பக்தர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. சோதனைக்கு பின்னரே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், செல்போன்கள் கண்டெடுக்கப்பட்டால் அவை பறிமுதல் செய்யப்படும் என்றும் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
பொது தரிசனம், ரூ.100 விரைவு தரிசனம், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான வரிசை என அனைத்து பகுதிகளிலும் பக்தர்கள் முழுமையாக பரிசோதனை செய்யப்பட்டு அதன் பின்னரே கோவிலுக்குள் அனுமதிக்கப்பட உள்ளனர். எனவே, பக்தர்கள் தங்களது செல்போன்களை தங்கியிருக்கும் இடங்களிலோ அல்லது வாகனங்களிலோ பாதுகாப்பாக வைத்துவிட்டு சாமி தரிசனம் செய்ய வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பக்தர்களின் வசதிக்காக, கோவில் நிர்வாகம் சார்பில் செல்போன்களை பாதுகாப்பாக வைப்பதற்காக கைபேசி பாதுகாப்பு வைப்பகங்கள் ஆங்காங்கே நிறுவப்பட்டுள்ளன. இவற்றை பயன்படுத்தி பக்தர்கள் தங்களது செல்போன்களை பாதுகாப்பாக வைத்துவிட்டு தரிசனத்திற்கு செல்லலாம். மேலும், பக்தர்களின் அவசர பயன்பாட்டிற்காக மருத்துவ மையம், ஆம்புலன்ஸ், ஒலிபெருக்கிகள், மின்கல ஊர்திகள் மற்றும் சக்கர நாற்காலி போன்ற வசதிகளும் கோவில் நிர்வாகத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
கோவிலில் கடந்த 2022-ம் ஆண்டு முதல் செல்போன் பயன்படுத்த தடை அமலில் உள்ளது. தற்போது இந்த நடைமுறையை மேலும் தீவிரப்படுத்தும் வகையில், அனைத்து தரிசன வரிசைகளிலும் உள்ள நுழைவு வாயில்களில் பக்தர்கள் முழுமையான பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். சோதனையின் போது செல்போன் இருப்பது கண்டறியப்பட்டால், அவை பறிமுதல் செய்யப்படும். எனவே, பக்தர்கள் தங்களது செல்போன்களை பாதுகாப்பாக வைத்துவிட்டு கோவிலுக்கு வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.