தமிழகத்தில் அரிசி விலை திடீரென உயர்ந்துள்ளது. கிலோவுக்கு ரூ.10 வரை விலை ஏற்றம் கண்டுள்ளது. இது மக்களை அடுத்த அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
தமிழகத்தில் தற்போது 21 லட்சம் டன் அரிசி பற்றாக்குறை நிலவுகிறது. இதை ஈடுசெய்யும் விதமாக, ஆண்டுக்கு 30 லட்சம் டன் உயர் ரக சன்ன அரிசி ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு கர்நாடகாவில் ஏற்பட்ட மழைப் பற்றாக்குறை காரணமாக, உயர் ரக சன்ன நெல் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், லாரி வாடகை கட்டணம் 25 சதவீதம் உயர்ந்துள்ளதாலும், வெளிமாநிலங்களில் இருந்து வரும் அரிசியின் விலை கிலோவுக்கு ரூ.5 முதல் ரூ.10 வரை அதிகரித்துள்ளது.
தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் கடந்த பருவத்தில் நெல் விளைச்சல் குறைந்துள்ளது. கோடை மழை மற்றும் தற்போதைய பருவமழை பொய்த்துப் போனதால், கோடை மகசூல் மற்றும் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக, கர்நாடக அணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால், குறுவை சாகுபடியை உறுதி செய்ய முடியாத நிலை உள்ளது. மேலும், அரிசி ஆலைகளுக்கான மின்சார நிலை கட்டணம் கடந்த ஆட்சியில் ரூ.5,000-லிருந்து ரூ.20,000 ஆக உயர்த்தப்பட்டது. ஆலைகள் இயங்காத போதும் இந்த கட்டணத்தை செலுத்த வேண்டியிருப்பதால், அந்த செலவினமும் அரிசி விலையில் சேர்க்கப்படுகிறது. இதனால், வரும் காலங்களில் அரிசி விலை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்க மாநிலச் செயலாளர் கூறுகையில், 'கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் இருந்து அதிகளவில் சன்ன ரக நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. அந்த மாநிலங்களில் நெல் இருப்பு குறைவாக இருப்பதால், அங்குள்ள ஆலைகளின் தேவைக்குப் போகவே எங்களுக்கு நெல் கிடைக்கிறது. சில மாதங்களில், ஒரு கிலோ நெல்லுக்கு ரூ.10 வரை விலை உயர்ந்துள்ளது. லாரி வாடகையும் உயர்ந்துள்ளது. அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படும் சீரக சம்பா அரிசி, கடந்த ஏப்ரல் மாதம் ரூ.84-க்கு விற்றது. தற்போது ரூ.180-க்கு விற்கப்படுகிறது. ஓராண்டில் கிலோவுக்கு ரூ.96 விலை உயர்ந்துள்ளது. வறட்சி, மழைப்பொழிவு இல்லாதது மற்றும் சன்ன ரக நெல் உற்பத்தி குறைந்ததால், அரிசி விலை மேலும் அதிகரிக்கும்' என்று தெரிவித்தார்.