சட்டசபை தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று, தளபதி விஜய் முதல்வராக பொறுப்பேற்றார். அவரது ஆட்சி சிறப்பாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த முறை, வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு வெளிநாட்டு இந்தியர்கள் பலர் வாக்களிக்க தமிழகம் வந்திருந்தனர். இதனால் சந்தேகமடைந்த தேர்தல் ஆணையம், வெளிநாடு திரும்புபவர்களை விமான நிலையங்களில் கண்காணித்து விசாரணை நடத்த அறிவுறுத்தியது. இதன் பேரில், சென்னை, திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட விமான நிலையங்களில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
வெளிநாடு செல்வோர் கைகளை சோதித்ததில், 'மை' இருந்தவர்கள் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். அப்போது, பலர் வெளிநாட்டு குடியுரிமை பெற்றிருந்தும், தமிழக வாக்காளர் அடையாள அட்டையை பயன்படுத்தி வாக்களித்தது தெரியவந்தது. சட்டவிரோதமாக வாக்களித்தவர்கள் கண்டறியப்பட்டு, அவர்கள் ஓட்டுப் போட்ட தொகுதிகளுக்குட்பட்ட காவல் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றம் மூலம் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
மதுரை விமான நிலையத்தில், ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதியைச் சேர்ந்த முகமது சுபீர் (65), அவரது மனைவி அஹானா பீவி (56) ஆகியோர் இலங்கை செல்ல விமான நிலையம் வந்தனர். அவர்களின் கை விரலில் 'மை' இருந்ததோடு, இலங்கை குடியுரிமை பெற்றதும் ஆவணங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டது. திருவாடானை தொகுதியில் வாக்களித்தது அம்பலமான நிலையில், இருவரையும் அதிகாரிகள் அவனியாபுரம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்த தம்பதி, பின்னர் நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.