தமிழக மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் டி. சரத்குமார் மீது, போதைப்பொருள் பயன்பாடு தொடர்பான வீடியோ விவகாரத்தில், NDPS சட்டம் மற்றும் BNSS 2023-ன் கீழ் விசாரணை நடத்தக் கோரி வழக்கறிஞர் சரண்யா நடராஜன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திலும் சேப்பாக்கம் காவல் நிலையத்திலும் முறைப்படி புகார் அளித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் ஒரு வீடியோவில், சென்னை எம்.ஏ.சிதம்பரம் (சேப்பாக்கம்) மைதானத்தில் உள்ள ஒரு பிரத்யேக அறையில், அமைச்சர் சரத்குமார் ஏடிஎம் கார்டு மற்றும் 500 ரூபாய் நோட்டைக் கொண்டு வெள்ளை நிறப் பவுடர் போன்ற தடை செய்யப்பட்ட போதைப்பொருளைக் கையாண்டதாகப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக அமைச்சர் தரப்பில், 'தன் மகள் மாத்திரை சாப்பிடுவதற்காகத்தான் அதைத் தூளாக்கினேன்' என்று விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், இந்த விளக்கத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள வழக்கறிஞர் சரண்யா, இது குறித்து பாரதிய நாகரிக் சுரக்ஷா சம்ஹிதா (BNSS), 2023 மற்றும் போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் (NDPS Act, 1985) கீழ் முறையான எஃப்.ஐ.ஆர் (FIR) பதிவு செய்து, தீவிரமான குற்றவியல் விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மக்கள் மத்தியில் பெரும் நம்பிக்கையைப் பெற வேண்டிய உயர் பதவியில் இருக்கும் ஒரு அரசு அமைச்சரே இத்தகையப் போதைப்பொருள் சர்ச்சையில் சிக்கியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடைபெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.