திருப்பூர் மாவட்டத்தில் யூடியூப் வீடியோக்களைப் பார்த்து வீட்டில் பிரசவம் பார்த்ததில், தாய் சசிகலா (32) ரத்தப்போக்கு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைசாமி – சசிகலா தம்பதியினருக்கு ஏற்கனவே 6 வயதில் ஒரு மகள் உள்ளார். முதல் பிரசவம் சி-செக்ஷன் மூலம் நடந்த நிலையில், அதன்பின் ஏற்பட்ட முதுகு வலி மற்றும் உடல்நலப் பாதிப்புகளால் ஆங்கில மருத்துவத்தின் மீது அதிருப்தி அடைந்த சசிகலா, இரண்டாவது பிரசவத்தை இயற்கையாக வீட்டிலேயே பார்த்துக்கொள்ள முடிவு செய்துள்ளார்.
இரண்டாவது முறை கர்ப்பமான சசிகலா, கர்ப்ப காலத்தில் ஒருமுறை கூட மருத்துவமனைக்குச் சென்று வழக்கமான பரிசோதனைகளை மேற்கொள்ளவில்லை. உறவினர்கள் வற்புறுத்தியும் அவர் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்துள்ளார். மாறாக, இணையதளத்தில் யூடியூப் வீடியோக்களைப் பார்த்து வீட்டிலேயே பிரசவம் பார்ப்பதற்கான வழிமுறைகளைத் திட்டமிட்டு வந்துள்ளார்.
கடந்த 23-ஆம் தேதி இரவு சசிகலாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அப்போதும் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்ததால், யூடியூப் வழிகாட்டுதலின்படி வீட்டிலேயே பிரசவம் பார்க்கப்பட்டுள்ளது. கடந்த 24-ஆம் தேதி அதிகாலை 5.42 மணியளவில் சசிகலாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. ஆனால், குழந்தை பிறந்த சில நிமிடங்களிலேயே சசிகலாவுக்கு கடுமையான மற்றும் கட்டுப்பாடற்ற ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மயக்கமடைந்துள்ளார்.
மயக்கமடைந்த சசிகலாவை குடும்பத்தினர் உடனடியாக மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலுதவிக்காக அனுமதித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக கோயம்புத்தூரில் உள்ள ராயல் கேர் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்குள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். எனினும், அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சசிகலா பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.