புதிய ரேஷன் கார்டு கோரி விண்ணப்பித்த லட்சக்கணக்கான மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. புதிய ரேஷன் கார்டு வழங்குவதில் ஏற்படும் காலதாமதம், லஞ்சம் மற்றும் முறைகேடுகளைத் தடுக்க, உணவுப் பொருள் வழங்கல் துறை ஒரு புதிய தொழில்நுட்ப முறையை அறிமுகப்படுத்த உள்ளது. தற்போது, தகுதியுள்ளவர்கள் பொது விநியோகத் திட்ட இணையதளம் மூலம் விண்ணப்பித்து வருகின்றனர். இந்த விண்ணப்பங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து ஒப்புதல் அளிப்பதே நடைமுறை. ஆனால், மாதந்தோறும் வரும் விண்ணப்பங்களில் பல நிலுவையில் வைக்கப்படுவதாகவும், அரசியல் சிபாரிசு மற்றும் முறைகேடுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன.
இந்தப் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், 'முதலில் விண்ணப்பிப்பவருக்கு முதலில் ஒப்புதல்' என்ற 'First Come, First Served' முறையை அமல்படுத்த புதிய மென்பொருளை உணவுப் பொருள் வழங்கல் துறை உருவாக்கி வருகிறது. இந்த மென்பொருளின்படி, ஒரு அலுவலகத்தில் பெறப்படும் விண்ணப்பங்களில் யார் முதலில் விண்ணப்பித்தார்களோ, அவர்களின் விண்ணப்பத்தின் மீது நடவடிக்கை எடுத்த பின்னரே அடுத்த விண்ணப்பத்தை அதிகாரிகள் பரிசீலிக்க முடியும். இதனால், இடைத்தரகர்களின் தலையீடு, லஞ்சம் மற்றும் முன்னுரிமை முறைகேடுகள் முற்றிலும் தவிர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய மென்பொருள் முறை விரைவில் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் நடைமுறைக்கு வர உள்ளது. இதன் மூலம், தகுதியுள்ள பொதுமக்கள் எந்தவித அரசியல் சிபாரிசோ, பரிந்துரையோ இல்லாமல், தாங்கள் விண்ணப்பித்த வரிசை எண்ணின் அடிப்படையில் விரைவாக புதிய குடும்ப அட்டையைப் பெற முடியும். வெளிப்படைத்தன்மை அதிகரித்து, பாரபட்சமின்றி அனைவருக்கும் விரைவாக குடும்ப அட்டைகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், கடந்த ஜனவரி மாதம் முதல் தமிழகம் முழுவதும் சுமார் 2.25 லட்சம் புதிய குடும்ப அட்டை விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இவற்றில் முதற்கட்டமாக தகுதிவாய்ந்த 46 ஆயிரம் பேருக்கு புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய ரேஷன் கார்டு தேவை அதிகமாக உள்ள பகுதிகளில் விரைவில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, விண்ணப்பங்களுக்கு உடனுக்குடன் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.