14 ஆண்டுகளுக்குப் பிறகு பாஸ்போர்ட் கட்டணங்களில் அதிரடி மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் அறிவிப்பின்படி, வரும் ஜூலை 1 முதல் புதிய பாஸ்போர்ட் பெறுவதற்கும், பழைய பாஸ்போர்ட்டை புதுப்பிப்பதற்கும் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். கடைசியாக 2012-ஆம் ஆண்டு தான் பாஸ்போர்ட் கட்டணங்கள் மாற்றியமைக்கப்பட்டன.
புதிய கட்டண விவரங்களின்படி, 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கான 36 பக்க சாதாரண பாஸ்போர்ட் கட்டணம் ரூ.1,500-லிருந்து ரூ.2,500 ஆகவும், தட்கல் திட்டத்திற்கான கட்டணம் ரூ.3,500-லிருந்து ரூ.5,000 ஆகவும் உயர்ந்துள்ளது. இதேபோல், 60 பக்க பாஸ்போர்ட்டின் சாதாரண கட்டணம் ரூ.2,000-லிருந்து ரூ.3,500 ஆகவும், தட்கல் கட்டணம் ரூ.4,000-லிருந்து ரூ.6,000 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
18 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கான 36 பக்க பாஸ்போர்ட் கட்டணம் சாதாரண முறையில் ரூ.1,750 ஆகவும், தட்கல் முறையில் ரூ.4,250 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தொலைந்து போன அல்லது சேதமடைந்த பாஸ்போர்ட்டுகளுக்கு மாற்றாகப் புதிய பாஸ்போர்ட் பெறுவதற்கான கட்டணங்களும் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளன. 36 பக்க மாற்று பாஸ்போர்ட்டுக்கு சாதாரண முறையில் ரூ.5,000 மற்றும் தட்கல் முறையில் ரூ.7,500 வசூலிக்கப்படும். 60 பக்க மாற்று பாஸ்போர்ட்டுக்குச் சாதாரண முறையில் ரூ.6,000 மற்றும் தட்கல் முறையில் ரூ.8,500 கட்டணம் செலுத்த வேண்டும்.
இது தவிர, காவல்துறை சரிபார்ப்பு சான்றிதழ், பாஸ்போர்ட் சரண்டர் சான்றிதழ் மற்றும் உலகளாவிய நுழைவுத் திட்ட சரிபார்ப்பு போன்ற இதர சேவைகளுக்கான கட்டணமும் இந்தியாவில் ரூ.500-லிருந்து ரூ.750 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கான கட்டணங்களும் இந்த புதிய விதிகளின் கீழ் கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளன. ஜூலை 1 அல்லது அதற்குப் பிறகு சமர்ப்பிக்கப்படும் அனைத்து பாஸ்போர்ட் விண்ணப்பங்களுக்கும் இந்த புதிய கட்டண அமைப்பு பொருந்தும் என வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.