விருதுநகரில் 'ஜனநாயகன்' திரைப்படம் திரையிடப்பட்ட தியேட்டரில், விஜய பிரபாகரனின் தேர்தல் தோல்வி குறித்த வீடியோ ஒளிபரப்பப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில், தேமுதிகவினர் தியேட்டரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, த.வெ.க எம்.எல்.ஏ. செல்வம் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட 83 பேர் கைது செய்யப்பட்டனர்.
'ஜனநாயகன்' திரைப்படம் நேற்று முன்தினம் வெளியானது. விருதுநகரில் உள்ள ஒரு திரையரங்கில், விருதுநகர் கிழக்கு மாவட்டச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான செல்வம், ரசிகர்களுடன் சிறப்பு காட்சியை காண வந்திருந்தார். திரைப்படத்தின் இடைவேளையின்போது, எம்எல்ஏ செல்வம் தரப்பில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ஒரு வீடியோ திரையிடப்பட்டது. இந்த வீடியோவில், கடந்த சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது, ஒரு செய்தி தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பப்பட்ட, 'விருதுநகர் தொகுதியில் தேமுதிக வேட்பாளர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் தோல்வி' என்ற செய்தி பதிவு செய்யப்பட்டு ஒளிபரப்பப்பட்டது. மேலும், தேர்தல் பிரச்சாரத்தின் போது எம்எல்ஏ செல்வம் வாக்கு சேகரித்த காட்சிகள் மற்றும் வெற்றிக்குப் பிறகு அவர் கலந்துகொண்ட நிகழ்வுகள் குறித்த காட்சிகளும் அதில் இடம்பெற்றிருந்தன.
இந்தச் சம்பவம் குறித்து அறிந்த தேமுதிகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். எம்எல்ஏ செல்வத்தைக் கண்டித்து, விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள திரையரங்கை நேற்று தேமுதிகவினர் முற்றுகையிட்டனர். இந்த முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட 6 பெண்கள் உட்பட மொத்தம் 83 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். எம்எல்ஏ செல்வம் மன்னிப்பு கேட்கும் வரை தங்களது போராட்டம் தொடரும் என தேமுதிகவினர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், த.வெ.க எம்எல்ஏ செல்வன் நேற்று இரவு வெளியிட்ட வீடியோ ஒன்றில், 'வீடியோவை வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தக் காணொளியால் யாருடைய மனமும் புண்பட்டிருந்தால், அதற்காக மனப்பூர்வமான வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்' என்று கூறியுள்ளார். இந்தச் சம்பவம் விருதுநகர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
