தூங்கும்போது செல்போன் சார்ஜ் போடுவது உயிருக்கே ஆபத்தானது என ஈரோடு மாவட்ட மின் ஆய்வுத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள் மின் விபத்துகளில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய முக்கிய அறிவுறுத்தல்களையும், எச்சரிக்கைகளையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.
பலரும் இரவு தூங்கச் செல்லும் முன் செல்போனை சார்ஜரில் போட்டுவிட்டு உறங்கச் செல்கின்றனர். விடியும் முன் முழுமையாக சார்ஜ் ஏறிவிடும், மறுநாள் பயன்படுத்த வசதியாக இருக்கும் என்ற பொதுமக்களின் இந்த அலட்சியமான அணுகுமுறையே பெரிய மின் விபத்துகளுக்குக் காரணமாக அமைகிறது என தமிழ்நாடு மின் ஆய்வுத்துறையின் ஈரோடு மின் ஆய்வாளர் உசேன்பாஷா தெரிவித்துள்ளார். எனவே, எந்தக் காரணத்தைக் கொண்டும் இரவு நேரங்களில், குறிப்பாக தூங்கும்போது மொபைல் போன் உள்ளிட்ட எந்த மின் சாதனங்களையும் சார்ஜ் செய்யக் கூடாது என அவர் தனது செய்திக்குறிப்பில் வலியுறுத்தியுள்ளார்.
நாம் தூங்கிக் கொண்டிருக்கும்போது, மின் சாதனங்கள் அதிக வெப்பமடைந்து வெடிப்பதற்கோ அல்லது மின் கசிவு ஏற்பட்டு தீ விபத்து உருவாவதற்கோ அதிக வாய்ப்புகள் உள்ளன. தூக்கத்தில் இருக்கும்போது இத்தகைய விபத்துகள் ஏற்பட்டால், உடனடியாகக் கவனித்துத் தப்பிக்க முடியாமல் பெரும் உயிரிழப்புகள் ஏற்படக்கூடும். எனவே, இந்தப் பழக்கத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், சந்தையில் மலிவான விலையில் கிடைக்கும் தரம் குறைந்த மற்றும் போலியான சார்ஜர்களை பொதுமக்கள் வாங்கிப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் மின் ஆய்வுத்துறை எச்சரித்துள்ளது.
வீடுகளில் மின் சாதனங்களை இணைக்கும் பிளக் சாக்கெட்டுகளில் முறையான 'எர்த்' (Earth Connection) எனப்படும் புவித்தடுப்பு இணைப்பு கண்டிப்பாக இருக்க வேண்டும். இந்த எர்த் இணைப்பு சரியாக இல்லாத பட்சத்தில், மின் கசிவு ஏற்படும்போது மின் சாதனங்களைத் தொடும் மனிதர்களுக்குக் கடுமையான ஷாக் அடிக்கும் அபாயம் உள்ளது. ஈரமான துணிகளைக் கொண்டு சுவிட்ச் போர்டுகளையோ அல்லது மின்சார உபகரணங்களையோ சுத்தம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். ஈரப்பதம் இருக்கும் இடத்தில் மின்சாரம் வேகமாகப் பாயும் என்பதால், எந்தவொரு மின் சாதனத்தையும் ஈரத்துணியால் துடைக்கக் கூடாது. வீடுகளில் நீண்ட நாட்களாக இருக்கும் பழுதடைந்த, பழைய மின் ஒயர்கள் மற்றும் கம்பிகளைத் தொடர்ந்து பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். காலாவதியான ஒயர்கள் எந்த நேரத்திலும் உருகி, தீ விபத்தை ஏற்படுத்தக்கூடும்.
சிறுவர்களின் கைகளுக்கு எட்டும் தூரத்தில் எந்த மின் சாதனங்களையும் வைக்கக் கூடாது. சுவர்களில் உள்ள பிளக் பாயிண்டுகளையும் குழந்தைகள் தொடும் உயரத்தில் அமைக்கக் கூடாது. அவர்கள் அறியாமல் மின் இணைப்புகளில் கைகளை வைத்தால் ஏற்படும் விளைவுகள் ஆபத்தாய் முடிந்துவிடும். எனவே, மின்சாரப் பயன்பாட்டில் இந்த எளிய பாதுகாப்பு வழிமுறைகளை மக்கள் துல்லியமாகக் கடைப்பிடித்தால் மட்டுமே மின் விபத்துகளற்ற பாதுகாப்பான வாழ்வை உறுதி செய்ய முடியும் என்று ஈரோடு மின் ஆய்வாளர் உசேன்பாஷா பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.