ஹஜ் பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பை சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான் வெளியிட்டுள்ளார். 2027ஆம் ஆண்டு ஹஜ் கமிட்டி மூலம் ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்புவோர், தங்களது விண்ணப்பங்களை உடனடியாக ஜூலை 20ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். முதல் தவணையாக ரூ.1,52,300 செலுத்த தயாராக இருக்க வேண்டும்.
கடந்த ஆண்டு ஹஜ் பயணிகளுக்கு தமிழ்நாடு அரசு தலா ரூ.25,000 வீதம் ரூ.15 கோடிக்கும் மேல் மானியம் வழங்கியது. இந்த ஆண்டும் மானியம் வழங்கப்படும் என்றும், எதிர்காலத்தில் மானியத் தொகையை உயர்த்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். சென்னை, நங்கநல்லூரில் சுமார் ரூ.40 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஹஜ் இல்லப் பணிகள் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் நிறைவடையும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானியம் ரூ.50,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மானியத்தைப் பெற விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூன் 30. தகுதியானவர்கள் உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும். புதிய வக்ஃபு திருத்தச் சட்டத்தின் கீழ், வக்ஃபு சொத்துக்களை உமீத் (Umeed) இணையதளத்தில் பதிவேற்ற கூடுதல் அவகாசம் பெறப்பட்டுள்ளது. தற்போது 95 சதவீதத்திற்கும் அதிகமான வக்ஃபு சொத்துக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. முறையான ஆவணங்கள் இல்லாத சொத்துக்களுக்கு கூடுதல் அவகாசம் கோரி உயர்நீதிமன்றத்தை அணுக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஆக்கிரமிப்பில் உள்ள வக்ஃபு சொத்துக்களை மீட்க தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. தேசிய புலனாய்வு முகமை (NIA) கண்காணிப்பில் இருப்பதாக பரவும் செய்திகள் முற்றிலும் வதந்தி என அமைச்சர் ஷாஜகான் மறுத்துள்ளார். பல்லாண்டுகளாக சிறையில் உள்ள கைதிகளை நன்னடத்தை அடிப்படையில் நிரந்தரமாக விடுதலை செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தாமதம் ஏற்பட்டால், ஃபர்லோ விதிகளின் கீழ் இரண்டு மாதங்களுக்கு பிணையில் விடுதலை வழங்குவது தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.