தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் மற்றும் முதல்வர் விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படத்தின் தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நியமனத்திற்கு திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர், அமமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாட்டைச் சாராத, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளரை தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக நியமித்தது ஏன்? மேகதாது அணை பிரச்சனை நிலவிவரும் நிலையில், கர்நாடகத்தைச் சேர்ந்த ஒருவரை பிரதிநிதியாக அனுப்புவது எப்படி தமிழ்நாட்டின் உரிமைகளைக் காக்கும்?' என கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், 'தமிழே தெரியாதவரை தமிழகத்தின் பிரதிநிதியாக நியமித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் இடையே ஓர் இணைப்புப் பாலமாகச் செயல்பட வேண்டிய முக்கியப் பொறுப்பில், தமிழகத்திற்கு சம்பந்தமே இல்லாத ஒருவரை எப்படி நியமிக்கலாம்?' என தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமாரின் நெருங்கிய நண்பர் என்பதாலா அல்லது காங்கிரஸின் நிர்பந்தமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், 'தனது திரைப்படத்தைத் தயாரித்தாரெனும் ஒற்றைக்காரணத்திற்காக, முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அரசுப்பொறுப்பில் தமிழர் அல்லாத ஒருவரை முதல்வர் விஜய் பணியமர்த்தியிருப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது. இது தமிழர்களை இழிவுசெய்யும் அவமரியாதை' என குறிப்பிட்டுள்ளார். அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன், 'தன்னுடைய இறுதி படமான ஜனநாயகனை தயாரித்ததோடு, திரையுலகிலிருந்து தனக்கு பிரியா விடை கொடுக்கும் நிகழ்வை மலேசியாவில் பிரம்மாண்டமாக நடத்தியதற்காக திரு வெங்கட் கே நாராயணா அவர்களுக்கு தமிழக அமைச்சருக்கு இணையான பதவியை வழங்கி அழகு பார்த்திருக்கிறார் முதலமைச்சர் ஜோசப் விஜய்' என விமர்சித்துள்ளார்.
திமுக எம்.பி ஆ.ராசா, 'முதலீட்டுப் புள்ளிக்கு தில்லியில் பதவி! கொள்கை தலைவர்களுக்கு சாதி சிறை! அரசாணை இல்லாமலே அரசுக்குள் அதிகாரத் தோழர்கள்! இருட்டில் இளிக்கும் வெளிப்படை நிர்வாகம்!' என மறைமுகமாக விமர்சித்துள்ளார்.